தந்தி டிவியிலிருந்து விலகியது ஏன் – ரங்கராஜ் பாண்டே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

பிரபல பத்திரிகையாளரும் தந்தி டிவியின் முதன்மை செய்தியாளருமான ரங்கராஜ் பாண்டே ராஜினாமா செய்துவிட்டதாக இணையதளங்களில் செய்திகள் பரவின. அதனை உறுதி செய்யும் வகையில் பாண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிகார் மாநிலம் பக்சரில் எனும் இடத்தில் பிறந்தவர் ரங்கராஜ் பாண்டே. தந்தையின் பெயர் ரகுநாதாச்சாரியர். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு பள்ளியில்தான் தனது பள்ளி படிப்பை தொடங்கியுள்ளார். பிறகு தமிழின் மீதிருந்த பற்றால் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் சேர்ந்து MA தமிழ் படித்தார். 1999 இல் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தினமலர் நாளிதழில் வேலைக்கு சேர்ந்தார். 2012 இல் தினதந்தி தொலைக்காட்சியில் சேர்ந்தார்.


ஆயுத எழுத்து எனும் சிறப்பு நிகழ்ச்சியில் பல்துறை குறித்து, பல்துறை அறிஞர்களுடன் சிறந்த முறையில் துணிச்சலுடன் விவாதம் நடத்திய பாண்டே திடீரென தந்தி டிவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

“என்னுடைய இந்த முடிவிற்கு எந்த பிண்ணனியும் இல்லை. நிர்வாகத்தின் மூலம் எந்த நெருக்கடியும் இல்லை. இது என்னுடைய எதிர்காலத்தை எண்ணி நானே எடுத்துள்ள முடிவு. ஒரே மாதிரியான வேலையில் எனக்கு அயர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனக்குள் ஓய்வும் மாற்றமும் தேவைப்படுகிறது. என்னுடைய இந்த முடிவால் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். அவர்களுக்கு நான் வழிவிட விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை ரிஸ்க் எடுக்கிறேன். ஆனால் இதே ஊடகவியல் துறையில் தான் என் பணி தொடரும்” என கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரங்கராஜ் பாண்டே தனிச்சேனல் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் கசிந்து வருகிறது. அதுமட்டுமின்றி ரங்கராஜ் பாண்டே ரஜினிக்கு அரசியல் ஆலோசகராக சேரவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.-source: sprk

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!