சிறுமிகளின் நினைவிடத்திற்கு சென்று தினமும் கதறி அழும் தந்தை – நெஞ்சை உருக்கிய சம்பவம்..!


மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கோடிெஷட்டிபுரா கிராமத்தை சேர்ந்தவர்கள் கல்பனா (வயது 6), சவுமியா (4). இருவரும் அக்காள், தங்கை ஆவார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் சிறுமிகள் 2 பேரையும் அவர்களது பாட்டி ஜெயம்மா (55) கனகனமரடி கிராமத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்.

அதன்படி கடந்த 24-ந்தேதி தனியார் பஸ்சில் பேத்திகளுடன் ஜெயம்மா பயணம் செய்தார். அந்த தனியார் பஸ் பாண்டவபுரா தாலுகா கனகனமரடி கிராமத்தின் அருகே தறிகெட்டு ஓடி காவிரி பாசன கால்வாய்க்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் ஜெயம்மா, கல்பனா, சவுமியா உள்பட 30 பேர் பலியானார்கள்.

இந்த கோர விபத்து கர்நாடக மக்களின் நெஞ்சை உலுக்கிவிட்டது. விபத்தில் உறவினர்கள், குடும்பத்தினர், குழந்தைகளை பறிகொடுத்தவர்கள் கதறி துடிக்கும் மரண ஓலம் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. .

விபத்தில் பலியான 30 பேரின் உடல்களும் விபத்து நடந்த இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு சிலரின் உடல்கள் அடக்கமும், சிலரது உடல்கள் தகனமும் செய்யப்பட்டது. அதுபோல் விபத்தில் பலியான கல்பனா, சவுமியா ஆகியோரது உடல்கள் கோடிஷெட்டிபுராவில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சோகம் இன்னும் மாறாமல் நெஞ்சை கசக்கி பிழியும் வகையில் தொடருகிறது என்பதற்கு கோடிஷெட்டிபுராவில் தினமும் நிகழும் இந்த சம்பவம் சோக காட்சியாக உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

விபத்தில் கல்பனா, சவுமியா ஆகிய 2 மகள்களை இழந்த அவர்களின் தாயும், தந்தையும் துக்கம் தாளாமல் தினமும் அழுதபடியே இருந்து வருகிறார்கள். அவர்கள் அழுது புலம்பிய படியே உள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் குடும்பத்தினர், உறவினர்கள் தவித்து வருகிறார்கள். 2 குழந்தைகளையும் விபத்தில் பலிகொடுத்த தந்தை தினமும் தனது மகள்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று கண்ணீர் விட்டு கதறியபடி இருந்து வருகிறார். அவரை உறவினர்கள் ஆறுதல் கூறி அழைத்துச் சென்றாலும், மீண்டும் அவர் மகள்களின் நினைவிடத்திற்கு சென்று, கதறி அழுது வருகிறார்.

இந்த காட்சி காண்போரின் நெஞ்சை கசக்கி பிழியும் வகையில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!