இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்..!


ராமேசுவரத்தில் இருந்து கடந்த 28-ந் தேதி மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் காட்டுராஜா, வர்கீஸ், ராமன் உள்பட 4 பேர் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும் வேலாதயுதம் என்பவருக்கு சொந்தமான படகை சேதப்படுத்தி மூழ்கச்செய்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த செயல் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து நேற்று மீனவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இன்று (1-ந் தேதி) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

வேலை நிறுத்தத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகமும் வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் தவறான காரணங்களை கூறி மீனவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் படகுகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இதற்கு மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசிடம் கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!