பஸ்சின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பிய வாலிபர் – சிறுவனையும் காப்பாற்றினார்…!


விபத்தில் சிக்கிய பஸ்சின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உயிர் தப்பிய வாலிபர், சிறுவனையும் காப்பாற்றினார். விபத்து பற்றிய உருக்கமான தகவல்கள் தெரியவந்துள்ளது.

உயிர்தப்பிய வாலிபர்

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே தனியார் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் பலியானார்கள். இந்த பஸ்சில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள் தான். இதில் நீச்சல் தெரியாததாலும், நெரிசலில் சிக்கியும் பலர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

விபத்து நடந்ததும் பஸ்சின் ஜன்னல் வழியாக ரோகித், கிரீஸ் ஆகியோர் தப்பி நீச்சல் அடித்து கரை சேர்ந்துள்ளனர். இதனால் அவர்கள் 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சிறுவனை காப்பாற்றினார்

இதில் கிரீஸ் விபத்தில் சிக்கிய பஸ்சின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே வந்துள்ளார். பின்னர் ரோகித்தை அவர் காப்பாற்றியுள்ளார்.

உயிர் தப்பியதில் ரோகித் பள்ளி மாணவன் ஆவான். இவன் வதேசமுத்திரா கிராமத்தை சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமையான நேற்று அரை நாள் பள்ளி இயங்கியுள்ளது. பள்ளி முடிந்து ரோகித் பஸ்சில் வீட்டுக்கு திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு வதேசமுத்திரா கிராமத்திற்கும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

கண்டக்டர் தப்பி ஓட்டம்

விபத்து பற்றி கிரீஸ் கூறுகையில், விபத்து நடந்ததும் பஸ்சின் கண்டக்டர் ஜன்னல் வழியாக வெளியேறி உயிர் தப்பினார். ஆனால் உயிர் தப்பிய கண்டக்டர், பயணிகளை காப்பாற்ற முயற்சிக்காமல் தப்பி சென்றுவிட்டார். அதுபோல் பஸ்சின் டிரைவர் பலியானாரா? இல்லை தப்பிச் சென்றாரா? என்பது தெரியவில்லை.

நான், மக்களுடன் சேர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டேன். பஸ் விபத்தில் சிக்கியதும் பஸ்சில் சிக்கியிருந்தவர்கள் உயிருக்கு போராடினர். அந்த காட்சி இன்னும் என் கண்களை விட்டு நீங்கவில்லை என்றார்.

காப்பாற்ற முடியாமல் போனது வேதனை

விபத்து பற்றி சிறுவன் ரோகித் கூறியதாவது:-

பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் காப்பாற்றும்படி சத்தம்போட்டனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தால், பஸ்சில் சிக்கியிருந்தவர்கள் என்ன செய்வது? என்பது தெரியாமல் பரிதவித்தனர். அவர்களது மரண ஓலம் இன்னும் எனது காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

நான் பஸ் கண்ணாடியை உடைத்து வெளியே வந்து நீந்தி கரை சேர்ந்தேன். என்னை காப்பாற்றியது இறைவன் தான். ஆனால் மற்றவர்களை என்னால் காப்பாற்ற முடியாமல் போனது வேதனையாக உள்ளது.

இவ்வாறு அவன் உருக்கமாக கூறினான்.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!