சென்னையில் கொசுக்களை ஒழிக்க ‘கம்பூசியா மீன்கள்’ அறிமுகம்..!! ஆய்வாளர்கள் அதிரடி முடிவு..!!


சென்னையில் கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்க, கொசுப் புழுக்களை உண்ணும் ‘கம்பூசியா’ மீன்களை ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் விட்டுள்ளனர். சென்னையில், ஒவ்வொரு மண்டலத்திலும் தனிக்குழுக்கள் அமைத்துத் தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக, நன்னீர் குட்டை, குளங்கள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அடையாளம் கண்டு, கொசுப் புழுக்களை உண்ணும் ‘கம்பூசியா’ மீன்களை விடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்காக, மாநகராட்சி சார்பில் 4.5 லட்சம் மீன்கள் வாங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, திரு.வி.க.நகர், வளசரவாக்கம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள நீர்நிலைகளில் இந்த மீன்கள் விடப்பட்டுள்ளன. திரு.வி.க.நகர் பகுதியில் 3,800 கிணறுகள் கணக்கெடுக்கப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள 64,67 ஆகிய வார்டுகளில் 12 ஆயிரம் மீன்கள் விடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக இன்று, கொளத்தூர் பூம்புகார் நகரில் ‘கம்பூசியா’ மீன்களை விடும் பணி நடைபெற்றது. மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, வீட்டு உரிமையாளர்களுக்கு இதுகுறித்து விளக்கம் கொடுத்தனர். தொடர்ந்து, கம்பூசியா மீன்களை விடும் பணி நடைபெற்றது.

“சென்னையின் 6-வது மண்டலமான கொளத்தூர் பகுதியில், 64-ம் வார்டில் மட்டும் 1350 கிணறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில், சுமார் 750 கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணியை முடித்துவிட்டோம். மீதமுள்ள கிணறுகளில் சில நாள்களில் முடிக்க உள்ளோம்” என்கிறார் துப்புரவு ஆய்வாளர் கோயில்.source-vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.