இளம்பெண்ணின் உயிரைப் பறித்த ஜாதகம் – திருச்சி அருகே பரிதாபம்..!


திருச்சியை அடுத்துள்ள துவாக்குடி அண்ணா வளைவு சொசைட்டி தெருவை சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு- நல்லம்மாள் தம்பதியின் மகள் நிவேதா (வயது 22). டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவரது தந்தை வெள்ளைக்கண்ணு இறந்து விட்டார்.

இந்நிலையில் திருமண வயதை எட்டிய மகள் நிவேதாவுக்கு அவரது தாய் நல்லம்மாள் மாப்பிள்ளை பார்த்து வந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து ஒரு வாலிபர் வந்து நிவேதாவை பெண் பார்த்து விட்டு சென்றார். அதன் தொடர்ச்சியாக இருவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

பின்னர் நல்லம்மாள் மாப்பிள்ளையின் ஜாதகத்தை வாங்கி ஜோசிரியரிடம் காண்பித்தார். அவர் மாப்பிள்ளை ஜாதகம் சரியில்லை என்று கூறியுள்ளார். இதை நல்லம்மாள், மகள் நிவேதாவிடம் கூறினார். ஆனால் நிவேதா அந்த மாப்பிள்ளையை தான் திருமணம் செய்வதாக கூறினார். இதனால் தாய், மகள் இடையே பிரச்சினை வெடித்தது. இதில் மனமுடைந்த நிவேதா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல்அறிந்ததும் துவாக்குடி போலீசார் விரைந்து சென்று நிவேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!