கேரள கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கின் முக்கிய சாட்சி கொலையா..?


ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக இருந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். பின்னர் ஐகோர்ட் மூலம் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில், பேராயர் பிராங்கோவுக்கு எதிரான பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா (வயது 62) இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் தசுயா பகுதியில் உள்ள செயின்ட் பால் தேவாலயத்தில் அவர் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபற்றி டிஎஸ்பி ஷர்மா கூறுகையில், “செயின்ட் பால் தேவாலயத்தில் பாதிரியார் குரியகோஸ் வசித்து வந்தார். அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது உடலில் எந்த காயமும் இருந்ததாக தகவல் இல்லை. படுக்கையில் வாந்தி எடுத்திருக்கிறார். ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு தெரிந்தவரை, அவருக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்படவில்லை” என்றார்.

பாதிரியார் குரியகோஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். பேராயர் பிராங்கோ மூலக்கலுக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது சகோதரர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியான பாதிரியார் குரியகோஸ் மரணம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!