விஜயகலா மகேஸ்வரனின் பிரத்தியேக ஆலோசகர் கைது..!! பதற்றத்தில் மக்கள்..!!


முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் பிரத்தியேக ஆலோசகர் என குறிப்பிடப்பட்ட பெண் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றின் முற்படுத்தியபோது, வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள இலங்கைத் தூதுவரிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக யாழ்ப்பாண இளைஞர்கள் பலரை ஏமாற்றியதாக அண்மையில் பரபரப்பாக குற்றம்சுமத்தப்பட்டவரும் இதே பெண்தான் என பொலிசார் கூறியுள்ளனர்.

இன்று கைதான இந்த பெண்ணுடன், இன்னுமொருவரும் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தெஹிவளை கம்பல் பிளேஸைச் சேர்ந்த ஷெரின் ஒஸ்மான் என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவர் தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் தனிப்பட்ட செயலாளராக அறிமுகப்படுத்தியுள்ளார்.

அத்துடன், நுகேகொட, மிரிஹான பகுதியைச் சேர்ந்த ருவான் தர்மபிரிய என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் விசாரணைகளின் பின்னர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாண இளைஞர்கள் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில் பின்புலத்திலிருக்கும் முக்கிய சூத்திரதாரியான பெண் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மல்லாகம் நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது.

சுவிஸ் நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் பெண் உள்பட மூவரின் அறிமுகத்தின் ஊடாக 7 இலட்சம் ரூபா பணம் பெறப்பட்டது.

அந்தப் பணம் ஐக்கிய தேசியக் கட்சியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஆவணங்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கும் டான் தொலைக்காட்சி சேவை நிறுவன அலுவலகத்தின் பணியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த இளைஞனின் விண்ணப்பத்துக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. பணம் மற்றும் ஆவணங்கள் பெற்றவர்களையும் அந்த இளைஞனால் தொடர்புகொள்ள முடியவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கினார். முறைப்பாட்டில் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கம், அந்த இளைஞனால் ஆவணங்கள் கையளிக்கப்பட்ட ஊடகவியலாளருடையது என பொலிஸார் கண்டறிந்தனர். அதனால் ஊடகவியலாளரை பொலிஸார் கைது செய்யதனர்.

அத்துடன், வங்கிக் கணக்கிலக்கத்தின் அடிப்படையில் கரவெட்டி பிரதேசசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட இளைஞன் வைப்புச் செய்த வங்கிக் கிளையின் அமைவிடத்தின் அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் கடந்த ஓகஸ்ட் மாதம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் ஓகஸ்ட் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வை.சுபாஸ்கரன், சந்தேகநபர்களுக்குப் பிணை கோரி மன்றில் நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார். “சந்தேகநபர்கள் இருவரும் மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். ஆனால் அவர்களால் பெறப்பட்ட பணம் நேரடியாக ரூபினி என்ற பெண்ணுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்தான் முறைப்பாட்டாளருடன் தொடர்புகொண்டு சந்தேகநபர்களிடம் பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

எனவே முறைப்பாட்டாளருக்கு செலுத்தவேண்டிய 7 இலட்சம் ரூபா பணத்தையும் ரூபினி என்ற பெண்ணிடம் பெற்று வழங்குவதற்கு சந்தேகநபர்களுக்கு நீதிமன்று அவகாசம் வழங்கவேண்டும்.
முறைப்பாட்டாளருக்கு இன்றைய தினம் 50 ஆயிரம் ரூபா பணத்தை சந்தேகநபர்கள் வழங்குவர். மிகுதி 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தையும் ரூபினியிடம் பெற்று வழங்க சந்தேகநபர்களுக்கு அவகாசம் தந்து அவர்களைப் பிணைியில் விடுவிக்கவேண்டும்” என்று சட்டத்தரணி வை.சுபாஸ்கரன் மன்றிடம் சமர்ப்பணம் செய்தார்.

அத்துடன், ரூபினி தொடர்பான விசாரணைகளுக்கு அவர் தொடர்பான முழுமையான விவரங்களையும் வழங்பி சந்தேகநபர்கள் ஒத்துழைப்பு வழங்குவர் ” என்றும் அவர் மன்றுரைத்தார்.

“முறைப்பாட்டாளருடன் தொடர்பு கொண்ட பெண் தாரணி, ரூபினி என பல பெயர்களையும் கைபேசி இலக்கங்களையும் பயன்படுத்தியுள்ளார்” என்று முறைப்பாட்டாளரின் சட்டத்தரணி மன்றுரைத்தார்.

“சந்தேகநபர்கள், முறைப்பாட்டாளருக்கு வழங்கும் 50 ஆயிரம் ரூபா பணத்தை மன்று அனுமதிக்கிறது. மிகுதி 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை வரும் ஒக்டோபர் 29ஆம் திகதியோ அதற்கு முன்னதாகவோ வழங்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் சந்தேகநபர்களுக்கு கட்டளையிடப்பட்டது.

இந்த வழக்கில் மன்றில் தெரிவிக்கப்பட்ட அந்தப் பெண்தான் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதுவரிடம் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்ட போதும், விசாரணைகளில் அவர் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளன.source-pagetamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!