இந்தோனேசியாவில் ருத்ரதாண்டவம் ஆடிய சுனாமி… பலி எண்ணிக்கை 1,200-ஆக உயர்வு!


இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 1,200 என தெரியவந்துள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுலவெசி தீவின் பலு நகரில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த கடற்கரை விழாவில் சுமார் 20 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியது. இதனால் பலு நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகள், வேருடன் பெயர்ந்து விழுந்த மரங்கள், வாகனங்கள் என குப்பை மேடு போன்று காட்சியளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

பலு நகரில் மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றவண்ணம் உள்ளதாகவும், கட்டிட இடிபாடுகளில் பல உடல்கள் சிக்கியுள்ளதாகவும், மீட்க முடியாத அளவுக்கு பல உடல்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. Roa-Roa ஹொட்டலுக்குள் சுமார் 50 பேர் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களை மீட்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் பவுல் நகரில் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானவர்கள் அனைவரையும் அந்தந்த பகுதிகளில் கூட்டமாக புதைக்க ஜனாதிபதி Joko Widodo அனுமதியளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜனாதிபதி Joko Widodo மேற்கொண்ட ஆய்வுகளுக்கு பின்னரே பலி எண்ணிக்கை 1,200 எனவும், அது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.-Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!