தர்மபுரி பள்ளி மாணவி மர்மமாக மரணம்… கொலையா? தற்கொலையா? போலீஸார் தீவிர விசாரனை!


தர்மபுரி அருகே பள்ளி மாணவி மர்மமான முறையில் ஆற்றங்கரையோரம் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகாவுக்குட்பட்ட திருச்சாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வஜ்ரம். இவரது மகள் லெட்சுமி (வயது 14). இவர் கம்பை நல்லூர் அரசு பெண்கள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல வீட்டில் இருந்து லெட்சுமி பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் மாலை வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் திருச்சாகவுண்டம்பட்டி அருகில் உள்ள முள்ளனூர் ஆற்றின் கரையில் மாணவி ஒருவர் பள்ளி சீருடையுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே கிருஷ்ணாபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தது மாயமான மாணவி லெட்சுமி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.


இதற்கிடையே அங்கு வந்த உறவினர்கள் லெட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். பின்னர் லெட்சுமியின் உடலை மீட்டு போலீசார் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பிறகு தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்பது தெரியவரும்.

பள்ளிக்கு சென்ற மாணவி அங்கு ஏன் சென்றார், அவரை யாராவது கடத்தி சென்று கொலை செய்தார்களா? அல்லது மாணவியே தற்கொலை செய்து கொண்டாரா? என்பது மர்மமாக உள்ளது.

இதற்கிடையே மாணவி அந்த ஆற்றங்கரையில் பிணமாக கிடப்பதாக தகவல் தெரிவித்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி சாவுக்கும், அந்த வாலிபருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரைணை தீவிரப்படுத்தி உள்ளனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!