பெத்த மகன் உயிரோடு இருக்கும் போதே தாய்க்கு இறுதி சடங்கு நடத்திய மகள்…!


வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம்-4ம் சேத்தி கோவில்குளத்தைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம். இவரது மனைவி காந்திமதி (வயது 80). இவர்களுக்கு கரிகாலன் (60) என்ற மகனும், சரஸ்வதி (55) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகன் கரிகாலன் வீட்டில் இருந்த காந்திமதி தனது மகளுக்கு ரூ.15 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக்கொண்டு தாய் காந்திமதி தனது மகள் சரஸ்வதி வீட்டிற்கு வந்து தங்கிவிட்டார்.

15 ஆண்டுகளாக மகன் கரிகாலன் தாயை வந்து பார்க்கவில்லை. நேற்று காந்திமதி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். தகவலறிந்த மகன் கரிகாலன் தாயின் பிணத்தை தனது ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தார். ஆனால் இறப்பதற்கு முன் காந்திமதி இறுதி காரியங்களை மகளே செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாராம்.

இதையொட்டி இறந்த தாயை தனது வீட்டிற்கு வந்து அண்ணன் பார்க்கக்கூடாது என்றும், சுடுகாட்டிற்கு வேண்டும் என்றால் வரட்டும் என்றும், சரஸ்வதி கூறிவிட்டார். பிறகு தாயின் இறுதி சடங்கை தானே முன்னின்று செய்து கணவன் வைரப்பன் துணையோடு இறுதி சடங்களை செய்து சிதைக்கு தீ மூட்டினார்.

மகன் இருக்கும் நிலையில் மகள் தாய்க்கு இறுதி சடங்கு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!