4–வதும் பெண் குழந்தையா..? கருக்கலைப்பு செய்த கர்ப்பிணிக்கு நடந்த சோகம்..!!


மதுரை மாவட்டம் எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி ராமுத்தாய்(வயது 28). இவர்களுக்கு அழகுசித்ரா (9), பிரவீனா(6), அழகுலட்சுமி(3) என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 4–வது முறையாக ராமுத்தாய் கர்ப்பம் அடைந்தார். ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு கருவில் இருப்பது பெண் சிசு என தெரியவந்தது. ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 4–வதாகவும் பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்தினர் ஏற்று கொள்வார்களா? என ராமுத்தாய் மன குழப்பம் அடைந்தார்.

எனவே தனது கர்ப்பத்தை கலைத்து விடுவது என முடிவு செய்தார். இதைதொடர்ந்து கருக்கலைப்பு செய்ய தனியார் மருத்துவமனையை அணுகினர். அங்கு பரிசோதனை செய்தபோது கருவுற்று 7 மாதம் ஆகிவிட்டதால் கருக்கலைப்பு செய்ய முடியாது என கூறி விட்டனர்.

இதைதொடர்ந்து உசிலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வரும் தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த பாண்டி மனைவி லெட்சுமியை சந்தித்து கருக்கலைப்பு செய்யுமாறு ராமுத்தாய் கேட்டுள்ளார். அதற்கு லெட்சுமி தொட்டப்பநாயக்கனூரில் உள்ள எனது வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் எனக் கூறி நேற்று அழைத்து சென்றார்.

அங்கு வைத்து கருக்கலைப்பு செய்தபோது உடல்நிலை மோசமடைந்து ராமுத்தாய் பரிதாபமாக இறந்ததாக தெரிகிறது. இத்தகவலறிந்த ராமுத்தாய் உறவினர்கள் லெட்சுமி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது லெட்சுமியை கைது செய்யக்கோரி கோ‌ஷம் போட்டனர்.

இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சண்முகபாண்டியன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ராமுத்தாய் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்ஸ் லெட்சுமியை கைது செய்தனர்.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!