டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களை இழுக்க ஓபிஎஸ் – ஈபிஎஸ் புது திட்டம்..!!


இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைத்து இருப்பதன் மூலம் கடந்த 9 மாதங்களாக நிலவி வந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.

இதன் காரணமாக அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் முழுமையாக இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணிக்கு கிடைத்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வைத்து, கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்த டி.டி.வி. தினகரனுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இனி தினகரன் ஒன்று கோர்ட்டை நாட வேண்டும் அல்லது புதிய கட்சி தொடங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முயற்சியில் டி.டி.வி. தினகரனுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அவருக்கு சாதகமாக இருக்கும் ஒரே வி‌ஷயம்- அவரை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள்தான். இந்த 18 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை தினகரனால் உருவாக்க முடியும். குறிப்பாக சட்டசபையில் அ.தி.மு.க. ஆட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்ற இக்கட்டான நிலையை கொண்டு வர முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

தமிழக சட்டசபையின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 234. இவர்களில் ஆட்சியை நடத்த 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.


சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 133 பேர் இருந்தனர். ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை 132 ஆக குறைந்தது.

ஆனால் டி.டி.வி.தினகரனுக்கு 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததால் சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலம் 111 ஆக குறைந்தது. இதனால் ஆட்சி நடத்த தேவையான 117 எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லை என்ற சூழ்நிலை உருவானது.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்களும் உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டனர். இதன் மூலம் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 215 ஆக குறைந்துள்ளது.

இதன் காரணமாக சட்டசபையில் ஆட்சி நடத்த 108 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் 111 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தாலும் சிக்கல் இல்லை.

ஆனால் தகுதி இழப்பு செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பைப் பொறுத்தே அ.தி.மு.க. ஆட்சி சிக்கலின்றி நீடிக்குமா? இல்லையா? என்பது முடிவாகும்.


18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி இழப்பு சரியானதுதான் என்று கோர்ட்டு உறுதி செய்து விட்டால் அது எடப்பாடி பழனிசாமி ஆட்சி 2021-ம் ஆண்டு வரை சிக்கலின்றி பயணம் செய்வதற்கு அடித்தளம் அமைக்கும். ஆனால் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்தது செல்லாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால் அது ஆளும் அ.தி.மு.க.வுக்கு பாதகமாக இருக்கும்.

அத்தகைய தீர்ப்பு வரும் பட்சத்தில் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒரு தடவை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவாகும். அந்த சூழ்நிலையில் அவருக்கு 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும்.

ஆனால் அவர் வசம் 111 எம்.எல்.ஏ.க்கள்தான் இருக்கிறார்கள். பெரும்பான்மை பலத்தை எட்ட அவருக்கு மேலும் 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வேண்டும்.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டு விடும். இந்த அபாயத்தில் இருந்து தப்பும் நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் தீவிரமாக செய்யத் தொடங்கியுள்ளனர்.

அதன்படி டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 20 எம்.எல்.ஏ.க்களில் 15 பேரை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சிகளில் அவர்கள் ஓசையின்றி ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக, மிக நெருக்கமான மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-


அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்தால் எதிர்காலத்தில் அ.தி.மு.க.வுக்கு எத்தகைய சரிவு ஏற்படும் என்பதில் பல்வேறு கருத்துகள் உள்ளது. இப்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது. இதை தெளிவாக எடுத்துக் கூறி தினகரன் பக்கம் உள்ள எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்து வருகிறோம்.

தினகரனுடன் இருப்பவர்களில் 5 பேர் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தாய் கழகத்துக்கு திரும்ப வாய்ப்புள்ளது. 2021-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க அது ஒன்றே உதவியாக இருக்கும். இதை தினகரன் பக்கம் உள்ள எம்.எல்.ஏ.க்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

எனவே எங்கள் சமரச முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களில் யார்-யாரெல்லாம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பி வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் அணி மாறும் பட்சத்தில் அது எடப்பாடி – ஓ.பி.எஸ். அணியை மேலும் வலுப்பெற செய்யும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!