நடுவீதியில் வாலிபர் வெட்டி கொலை – மனைவியின் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!


தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்க நாயக்கன்பட்டியை சேர்ந் தவர் சொர்ணமணி. இவரது மனைவி கலையரசி. இவர்களது மகன் உதயகுமார் (வயது 29). இவர் அக்க நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கோழிக்கடை நடத்தி வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாஷாதேவி என்பவரை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு கனிஷ்காவும்(4), 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாஷாதேவி கணவரை பிரிந்து கோவில்பட்டி மந்திதோப்பில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதையடுத்து கனிஷ்கா உதயகுமாருடனும், மற்றொரு குழந்தை மாஷாதேவியுடனும் வசித்து வருகின்றனர். உதயகுமார் இரவில் கடை அருகிலேயே படுத்து தூங்கி விடுவார். இதே போல் கடந்த 13-ந் தேதி இரவு கடையை அடைத்துவிட்டு கடை அருகில் தூங்கினார்.

இந்நிலையில் கோழிக்கடை முன்பு உதயகுமார் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின்பேரில், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு திருஞான சம்பந்தன் தலைமையில் புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் ஞான்ராஜ், மணியாச்சி இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு கோழிக்கடை உரிமையாளரை கொலை செய்த கும்பலை பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வந்தனர்.

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில் உதயகுமாருக்கும், மாஷா தேவிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இருவரது வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்ற நிலையில் திடீரென மாஷாதேவி போக்கில் மாற்றம் ஏற்பட்டது.

இது உதயகுமாருக்கு தெரியவந்ததும் மனைவியை கண்காணித்தார். அப்போது மாஷாதேவிக்கு அக்க நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒரு வாலிபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி உதயகுமார் மனைவியிடம் கேட்டபோது அவர் மறுத்துள்ளார். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாஷாதேவி தனது 2-வது குழந்தையை தூக்கி கொண்டு கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதில் மனவேதனை அடைந்த உதயகுமார் அந்த வாலிபரை கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். இதை தெரிந்து கொண்ட மாஷா தேவி தனது கள்ளக்காதலனிடம் விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து கள்ளக்காதலன் உதயகுமாரை கொலை செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் போலீசார் அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த கள்ளக்காதலனான மின்சார வாரியத்தில் டவர் அமைக்கும் பணியில் சப் காண்டிராக்டராக பணியாற்றி வரும் ரஞ்சித்குமார் (28) என்பவரை இன்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

எனக்கும் மாஷா தேவிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இது உதயகுமாருக்கு தெரியவந்ததும் அவர் என்னை கண்டித்தார். இதைத்தொடர்ந்து மாஷா தேவி தனது தாய் வீடான மந்திதோப்புக்கு வந்து விட்டார். எனினும் உதயகுமார் என்னை தொடர்ந்து கண்டித்து வந்தார்.

மேலும் அவர் என்னை கொலை செய்ய திட்ட மிட்டதும் தெரியவந்தது. எனவே அவர் என்னை கொலை செய்வதற்கு முன்பு நான் முந்தி கொண்டு அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். நேற்று முன்தினம் கடை முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்த உதயகுமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!