மதுரை பெண் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி நாகராஜன் கொலை மிரட்டல்..!! ஆடியோ வைரல்..!!


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்த ரவுடி நாகராஜன் என்ற ‘புல்லட்’ நாகராஜன். இவர் மதுரை சிறைத்துறை பெண் போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் ‘வாட்ஸ்-அப்’ மூலம் ‘புல்லட்’ நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ வெளியாகி உள்ளது.

ஆடியோவில் ‘புல்லட்’ நாகராஜன் பேசியிருப்பதாவது:-

இன்ஸ்பெக்டருக்கு நடிகை விஜயசாந்தி என்று நினைப்பா? சரியான பெண்ணாக இருந்தால் இரவு தனியாக ரெய்டுக்கு வரவேண்டியது தானே. 10 போலீஸ்காரர்களை வைத்துக்கொண்டு அடிப்பது பெரிது கிடையாது. இன்னொரு வாயாடி ஜெயமங்கலத்தில் இருந்தது. அதை இப்பதான் டிரான்ஸ்பர் பண்ணிவிட்டேன். ஒவ்வொரு ஆளையும் தூக்கிவிட்டுக்கொண்டே இருக்க முடியாது. இது நிரந்தர பணி நீக்கம் ஆகிவிடும்.

இன்னொரு முறை என்னுடைய மண்ணில் உள்ள பெரியகுளத்துக்காரங்களை யாரை கைவைத்தாலும் நேரடியாக நான் வருவேன். பெண்ணாக இருப்பதால் ஒரு வாய்ப்பு தருகிறேன். 2-வது வாய்ப்பு தர நான் ஒன்றும் கடவுள் கிடையாது. பாவம் அனாதையாக ஈ மொய்த்துக்கிடக்கும் அளவுக்கு ஆகிவிடாதீர்கள்.

உன் வீட்டை சுற்றிலும் 100 போலீஸ் போட்டுக்கோ. என்னை பிடித்துவிட்டால் நான் அதே இடத்தில் இறந்துவிடுகிறேன். உங்களுக்கு எங்கே தொட்டால் வலிக்கும் என்பது எனக்கு தெரியும். இனிமேல் என்னுடைய பசங்ககிட்ட வாலாட்டினால் நான் எடுக்கிற ஆக்‌ஷன் பயங்கரமாக இருக்கும்.

இது, சினிமா கிடையாது. நீங்கள் ஒன்றும் நடிகை விஜயசாந்தி கிடையாது. சினிமா எல்லாம் பார்க்காதீர்கள். டியூட்டியை மட்டும் பாருங்கள். இல்லையென்றால் புழல் சிறைக்கு அனுப்பிவிடுவேன்.

இவ்வாறு அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மதனகலாவிடம் கேட்டபோது, ‘சில நாட்களுக்கு முன்பே இந்த ஆடியோ எனக்கு வந்தது. உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். இப்போது சமூக வலைதளங்களிலும் வெளியாகி உள்ளது. நான் இதுவரை புகார் எதுவும் அளிக்கவில்லை. எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை’ என்றார்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!