ரஜினிகாந்த்தின் அண்ணி திடீர் மரணம் – பெங்களூரு விரைந்தார் ரஜினி…!


ரஜினிகாந்த்தின் அண்ணனான சத்திய நாராயண ராவ்வின் மனைவி பத்மாவதி அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் காலமானார்.

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணனான சத்திய நாராயண ராவ்வின் மனைவி பத்மாவதி அம்மாள் (70) உடல்நலக் குறைவால் பெங்களூருவில் காலமானார். இவர்கள் ரஜினியை மகனைப் போல வளர்த்தனர். அவரை சென்னைக்கு அனுப்பி திரைப்படத்தில் நடிக்க வைத்தது முதல் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர்களின் பங்கு உள்ளது.

பத்மாவதிக்கு சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை நோய் ஆகியவை இருந்ததால் பெங்களூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பத்மாவதிக்கு நேற்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது.

அண்ணி இறந்த தகவல் கிடைத்ததும் மிகவும் வருத்தம் அடைந்த ரஜினிகாந்த், காலை 8.40 மணிக்கு பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். பத்மாவதியின் உடல் அவர்களின் ‘குரு கிருபா’ இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உறவினர்களும் நண்பர்களும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சத்திய நாராயண ராவ் – பத்மாவதி தம்பதிக்கு ராமகிருஷ்ணன், மகாதேவ், பாண்டுரங்கன், ஆகிய 3 மகன்களும் ராதாபாய் என்ற மகளும் உள்ளனர். பத்மாவதியின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடக்கிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!