தூக்க கலக்கத்தில் கழிப்பறையில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக மரணம்..!


தூக்க கலக்கத்தில் கழிப்பறை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம். அவருடைய மகன் விஷ்வத் பாலா (வயது 4). பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்த சிறுவன் விஷ்வத் பாலா, கழிப்பறைக்கு சென்றான். தூக்க கலக்கத்தில் இருந்த அவன், படிக்கட்டில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் சிறுவனின் பின்தலையில் அடிபட்டு அவன் அலறினான். உடனே சிறுவனின் தாயார் ஓடிவந்து, தலையில் லேசாகத்தான் அடிபட்டுள்ளது என்று நினைத்து தடவி விட்டுள்ளார். தைலமும் தேய்த்துவிட்டதாக தெரிகிறது. பின்னர் சிறுவனை தூங்க வைத்தார்.

காலையில் எழுந்து பார்த்த போது, சிறுவன் அசைவற்று கிடப்பதை கண்டு அவனுடைய தாயாரும், குடும்பத்தினரும் பதறினர். உடனே அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் விஷ்வத்பாலாவை டாக்டர் பரிசோதித்த போது, அவன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மகனை பிணக்கோலத்தில் பார்த்து அவனுடைய தாயாரும், குடும்பத்தினரும் கதறியது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்ததும் முதுகுளத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி, உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முதுகுளத்தூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் உடல் அவனுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!