ஜோதிடரால் கல்லூரி மாணவர் தற்கொலை…? நெஞ்சை உருக்கிய வாட்ஸ்அப் வீடியோ…!


திருச்சி அருகே ‘வாட்ஸ்அப்’பில் வீடியோ வெளியிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள ராசிப்பட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது 18). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் வீடியோ ஒன்று எடுத்து அதை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தார். அதில், தொலைக்காட்சி செய்தி வடிவில், துக்க செய்தி ஒரு நிமிடம் படிக்கவும் என்றும், அதில் அவரது பெயர், வயது, ஊர் மற்றும் முகவரி எழுதி இருந்தார். மேலும், எனது சாவிற்கு உறவினர்களோ, நண்பர்களோ யாரும் காரணமில்லை.

ராசிப்பட்டி ஊருக்குள் உள்ள 2 குடும்பங்கள் தான் காரணம். நான் இறந்த பின்பும் எனது ஆன்மா அந்த 2 குடும்பங்களையும் அடியோடு அழிக்கும். எனது இறுதி முகத்தினை நண்பர்கள் பார்க்க வேண்டும். ஜோதிடரால் எனக்கு நேர்ந்த இந்த மரணம் இனிமேல் எனது ஊரில் யாருக்கும் நேரிடக்கூடாது.

இந்த உலகில் உயிரோடு இருந்து பாவங்கள் செய்வதைவிட இறப்பது மேல். நான் இறந்த பின்பும் எனது மரணம் பற்றிய வழக்குகளை காவல்துறையினர் விசாரிக்க கூடாது.

என்னை பார்த்ததை போன்று என் குடும்பத்தையும் இனி நண்பர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அங்குள்ள கோவில் முன்பாக உள்ள மணியின் மீது காற்றில் ஊஞ்சலாடி கொண்டிருக்கிறது எனது ஆன்மா. கடந்த 2 வருடமாக கொண்டாட முடியாத மாரியம்மன் கோவில் திருவிழாவை ஊர் கூடி நடத்திட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுமட்டுமின்றி தூக்கில் தொங்குவது போன்று ஒரு படமும், இந்த இறப்பு பற்றி தொலைக்காட்சியில் செய்தி வருவது போன்று தயார் செய்யப்பட்ட வீடியோ ஒன்றும் அதில் இடம் பெற்று இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள வனப்பகுதியில் ராமர் மரத்தில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். தகவலறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அங்கு சென்று உடலை பார்த்து கதறி அழுதனர்.

அதைத்தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் அப்துல் கபூர் தலைமையிலான போலீசார் ராமரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமர் தனது சாவுக்கு ராசிப்பட்டியில் உள்ள 2 குடும்பத்தினர் மற்றும் ஜோதிடர் ஆகியோர்தான் காரணம் என வாட்ஸ்அப்பில் தெரிவித்துள்ளார். எனவே அந்த குடும்பத்தினர் மற்றும் ஜோதிடர் தற்கொலைக்கு தூண்டியதால் ராமர் இந்த செயலில் ஈடுபட்டாரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் ராமர் தற்கொலைக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!