தீராத பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறி பெண்களிடம் சாமியார் செய்த தில்லாலங்கடி வேலை..!


அசாம் மாநிலத்தில் தீராத பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறி பெண்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தில் மக்களிடத்தில் இன்னும் போதிய கல்வி அறிவு ஏற்படவில்லை. பல மாவட்டங்களில் சாமியார்களை மக்கள் அதிகம் நம்புபவர்களாக உள்ளனர்.

இதனால் போலி சாமியார்களும் அங்கு தாராளமாக வலம் வருகிறார்கள்.

தற்போது ஒரு சாமியார் பெண்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து தில்லாலங்கடி வேலை செய்து கைதாகி இருக்கிறார்.

இந்த சாமியார் பெயர் ராமு பிரகாஷ் சவுகான். அங்குள்ள மோரிகான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அவர் வசித்து வந்தார்.

தனது வீட்டு முன்பு சிறு கோவிலை கட்டி இருந்த அவர், பக்தர்களுக்கு அருளாசி வழங்க தொடங்கினார்.

தன் மீது கடவுள் விஷ்ணு புகுந்து இருப்பதாகவும் அதன் மூலம் ஆசி வழங்கி தீராத பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் பிரசாரங்களை மேற்கொண்டார்.

இதனை நம்பி ஏராளமானோர் அவரிடம் வந்தனர். பக்தர்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து அருளாசி வழங்குவது அவரது வழக்கம்.

பெண் பக்தர்களுக்கும் இவ்வாறு தான் அவர் ஆசி வழங்குவார். ஆனாலும், அதை பொருட்படுத்தாத ஏராளமான பெண்கள் அவரிடம் வந்து ஆசி பெற்றனர்.

அவர்கள் ஒவ்வொருவரையும் கட்டி அணைத்து முத்தம் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்.

இதன் மூலம் நோய்கள் தீருவதாகவும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதாகவும், மனதளவில் பாதிப்புகள் குறைவதாகவும் பக்தர்கள் நம்பினார்கள்.

நாளுக்கு நாள் பெண் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதை உள்ளூர் டி.வி. சேனல் ஒன்று படம் பிடித்து ஒளிபரப்பியது.

இதுபற்றிய தகவல் போலீசுக்கு வந்தது. இதையடுத்து போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். சாமியார் மக்களை ஏமாற்றி இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் அவரை கைது செய்தனர்.

சாமியாருக்கு தெய்வீக சக்தி வந்திருப்பதாக அவரது தாயார் தான் மக்களிடம் செய்திகளை பரப்பி வந்தார்.

இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!