மாணவிக்கு பாலியல் தொல்லை – விசாரணையில் சிக்கிய 3 பேராசிரியர்கள்..!!


திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த 22 வயது இளம்பெண். கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் மதுரையை சேர்ந்த தங்கபாண்டியன் (40). என்பவர் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இரவு நேரத்தில் விடுதிக்கு சென்று சென்னை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதற்கு துணை பேராசிரியை மைதிலி, விடுதி வார்டன் புனிதா ஆகியோர் துணையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் முறையிட்டனர்.

அப்போது அந்த பகுதி கிராம மக்கள் மாணவியின் பெற்றோருடன் இணைந்து கல்லூரி முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர்.

மேலும் தகவலறிந்த டி.எஸ்.பி. பழனி கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். இதற்கிடையில் கல்லூரி மாணவியை பெண் பேராசிரியைகள் மிரட்டும் ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.

இந்நிலையில் பேராசிரியர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி திருவண்ணாமலை மக்கள் நீதிமன்றத்தில் தனது தந்தையுடன் ஆஜராகி மாவட்ட நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி மகிழேந்தி, மாணவி மற்றும் அவரது தந்தையிடம் விசாரணை நடத்தினார். பின்னர் வாழவச்சனூர் வேளாண் கல்லூரிக்கு சென்று உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் மற்றும் கல்லூரி, மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.


அப்போது 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் நீதிபதியிடம், எங்களது ஐடி கார்டு, பேனா, பென்சில், கண் கண்ணாடிகளை அந்த மாணவி திருடிக் கொள்வார் என்று கூறினர்.

அதற்கு நீதிபதி மகிழேந்தி, அந்த மாணவிக்கு அனைவரது பொருட்களை திருடுவதுதான் வேலையா? படிக்கும் வேலையில்லையா? தொலைந்து போன பொருட்களுக்கு புகார் தெரிவித்தீர்களா? என்று அவர்களிடம் கேட்டார்.

தொடர்ந்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம், தொலைந்ததாக கூறப்படும் பழைய ஐடி கார்டுக்கு பதில் மறு ஐடி கார்டுக்கு பணம் பெற்றதற்கான ரசீது உள்ளதா? என்று கேட்டார். அந்த ரசீதுகள் பழைய கட்டிடத்தில் உள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி மகிழேந்தி, கல்லூரி விடுதியில் பாலியல் புகார் தெரிவித்த மாணவி தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அந்த அறைக்கு உள்தாழ்ப்பாள், வெளிதாழ்ப்பாள் எதுவும் இல்லை. இதையடுத்து மாணவ, மாணவிகளிடம் பேராசிரியர்கள் சொன்னதையே ஒன்றுபோல் சொல்லியுள்ளீர்கள்.

கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய சொன்னால் செய்கிறீர்கள். சாலையில் அமர சொன்னால் அமருவீர்கள். அவர்கள் கூறும் கருத்துக்களையே கூறுகிறீர்கள் என்று தெரிவித்ததுடன், பேராசிரியர்களை பார்த்து, மனித உரிமை கழகத்தினர் இங்கு வந்து 4 அல்லது 5 நாட்கள் தங்கி விசாரணை நடத்துவார்கள் என்று கூறினார்.

இதை தொடர்ந்து நீதிபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க திருவண்ணாமலை எஸ்.பி.க்கு பரிந்துரை செய்யப்படும். அந்த விசாரணை முடிந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியும் என்று கூறினார்.

மாணவி பேராசிரியர்கள் மீது கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுகள் 40 பக்கத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த புகார் கடிதம் மற்றும் நீதிபதியின் விசாரணை அறிக்கை எஸ்.பி. அலுவலகத்தில் இன்று கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மாணவி புகார் கூறிய பேராசிரியர் தங்க பாண்டியன், பேராசிரியைகள் புனிதா, மைதிலி மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவி கூறிய புகார்கள் குறித்து விசாரணை நடத்த கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து 5 பேர் கொண்ட குழு இன்று வாழவச்சனூர் வேளாண் கல்லூரிக்கு விசாரணை நடத்த வருகின்றனர்.

அந்த குழு மாணவி மற்றும் புகாரில் சிக்கியுள்ள பேராசிரியர் மற்றும் பேராசியைகளிடம் விசாரணை நடத்துகின்றனர். அதன் அடிப்படையில் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் மனித உரிமை கழகத்தினரும் விசாரணை நடத்த வருகின்றனர்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!