வீடு தருவதாக கூறி ரூ. 2 கோடியை சுருட்டிய முன்னாள் பெண் கவுன்சிலர்- கணவர் தலைமறைவு..!


குடிசை மாற்று வாரியத்தில் வீடு தருவதாக ரூ. 2 கோடி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான முன்னாள் பெண் கவுன்சிலர் மற்றும் அவருடைய கணவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுவண்ணாரப்பேட்டை, பூண்டிதங்கம்மாள் தெருவில் வசித்து வருபவர் நாகலிங்கம், ஆர்.கே.நகர் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவராக உள்ளார். இவரது மனைவி சசிகலா 39-வது வார்டு முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர்.

கணவன்-மனைவி இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதி அண்ணாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்களிடம் எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக பணம் பெற்றனர். 161 பேரிடம் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் பணம் வசூலித்ததாக தெரிகிறது.

ஆனால் அவர்கள் கூறியபடி குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்து கொடுக்கவில்லை. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ரூ. 2 ஆயிரம் வசூலித்தனர்.

இதுபற்றி பணம் கட்டியவர்கள் கேட்டபோது சசிகலாவும், அவரது கணவரும் சரிவர பதில் கூறவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பணம் கட்டியவர்கள் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம், வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் அலுவலகம், காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் புகார் அளித்தனர். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இந்த நிலையில் சசிகலா, அவரது கணவர் நாகலிங்கம் மீது காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் மோசடி (420), நம்பிக்கை மோசடி (406) ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தற்போது சசிகலாவும், நாகலிங்கமும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக அவர்கள் சுமார் ரூ. 2 கோடி வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து வருகின்றனர். இச்சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!