கிரிக்கெட்டால் நடந்த கொடூரம் – 9ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்..!


கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாரப்பன் தெருவை சேர்ந்தவர் அன்சாரிகான். இவரது மகன் அப்துல்லா என்கின்ற அப்துல் கலாம் (வயது 14). அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

அப்துல்லா அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் சிலருடன் காக்களூரில் உள்ள பள்ளி வளாக மைதானத்தில் நேற்று கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த பந்து அங்கிருந்த ஒரு மாணவன் மீது விழுந்தது.

இதனால் அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அப்துல்லாவை தாக்கினார். இதில் அப்துல்லா மயங்கி கீழே விழுந்தார்.

இதை கண்ட அப்துல்லாவின் நண்பர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அப்துல்லா பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!