இன்ஸ்டாகிராம் போட்டோ பிரியர்களின் புது ட்ரெண்ட் – முதல்நாள் டிரெஸ் வாங்கி மறுநாள் ரிட்டர்ன்…!


ஆன்லைனின் புது டிரெஸ்கள் வாங்கி போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பதிவேற்றி பின்னர் டிரெஸ்சை ரிட்டர்ன் செய்யப்படும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பவர்களில் பலர் புகைப்பட பிரியர்களாகவும் இருக்கின்றனர். புல், செடி, மரம் என கண்ணுக்கு தென்பட்டதெல்லாம் கேமராவில் கிளிக்கி பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிடுகின்றனர்.

பலர் தங்களை தானே செல்பி எடுத்து பதிவிடுகின்றனர். போட்டோ பதிவிடுவதை விட அதற்கு எத்தனை லைக்குகள் வருகின்றன என்பதே முக்கியம். அதிகமான லைக்குகளை குவிக்க புதுப்புது யுத்திகளையும் அவர்கள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது ஒரு நாள் ஒரு உடை என்ற புதிய முறை ட்ரெண்ட் ஆகியுள்ளது.

பிரிட்டனின் பார்கேகார்ட்டில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பத்தில் ஒரு போட்டோ பிரியர் ஆன்லைனில் புதிய துணிகள் வாங்கி, பின்னர் அதனை அணிந்து போட்டோ எடுத்து பின்னர் அந்த துணிகளை ரிட்டர்ன் செய்து விடுகின்றனர்.

புதுத்துணிகளுடன் தாங்கள் எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து தங்களது பாலோயர்களை கவர்கின்றனர். ஒரு முறை அணிந்த துணிகளுடன் போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் போட்டுவிட்டால், பின்னர் அதே துணியுடன் போட்டோ எடுத்து போட்டால் அது ஒருவித அசவுகரியத்தை கொடுக்கிறது என்பதால் இந்த புது ட்ரெண்ட் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரிட்டனில் நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால், ஒரு துணி எடுக்கும் பட்சத்தில் அது உங்களுக்கு சவுகரியமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் பணம் அளிக்கலாம். இல்லையெனில், அதனை திரும்ப அளித்து விடலாம். இந்த வசதியை பயன்படுத்தி போட்டோ பிரியர்கள் புது துணிகளாக வாங்கி குவித்து போட்டோ எடுத்து பின்னர் ரிட்டன் செய்கின்றனர்.

இளசுகள் தான் இந்த தில்லாலங்கடியில் ஈடுபடுகின்றனர் என நினைக்க வேண்டாம். 33 முதல் 45 வயதுள்ள ஆண்கள், பெண்கள் தான் இந்த வேலையை அதிகம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!