சென்னையில் பிரபல டைரக்டர் சிவக்குமார் மர்மமாக மரணம் – திரையுலகினர் இரங்கல்..!


அஜித், அர்ஜூன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கிய டைரக்டர் சிவக்குமார் சென்னையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

1997-ம் ஆண்டில், அஜித், கவுண்டமணி, செந்தில், உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான ‘ரெட்டை ஜடை வயசு’ திரைப்படத்தின் இயக்கியவர் சிவகுமார். இவர் அர்ஜூன் நடிப்பில் வெளியான ஆயுத பூஜை உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இயக்குனராக நீண்ட நாட்களாக வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த சிவகுமார், திருமணம் செய்து கொள்ளாமல் சென்னை விருகம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், இயக்குனர் சிவக்குமாரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக நேற்று அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சிவகுமார் வீட்டின் பூட்டை உடைத்து போலீஸ் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நாற்காலியில் அமர்ந்தபடி உடல் அழுகிய நிலையில் சிவகுமார் பிணமாக கிடந்தார்.

சிவகுமாரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இயக்குனர் சிவக்குமார் மறைவுக்கு நடிகர் பல்வேறு நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் சிவக்குமார் தற்கொலை செய்துகொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணை முடிந்து உடல் ஒப்படைக்கப்பட்ட பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!