பிக்பாஸ் வீட்டில் ஜெயலலிதாவை களங்கப்படுத்த முயற்சி..? கமலுக்கு வந்த புதிய சோதனை..!


நடிகர் கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தும் தனியார் தொலைக்காட்சி மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலை, ஒய்.எம்.சி.ஏ. கட்டடத்தில் வசித்து வருபவர் லூசியாள் ரமேஷ். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இவர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 27 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறேன். நான் பல்வேறு சமூக, சமுதாயப் பணிகளையும் செய்து வருகிறேன்.

தமிழகத்தில் சமீப காலமாக புதுப்புது அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. அப்படி கட்சி ஆரம்பிப்பவர்கள், தாங்கள் மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் எனக் கூறி ஆட்சிக்கு வர முயற்சி செய்யலாம். ஆனால், அதைவிட்டு முந்தைய ஆட்சியாளர்களை கேவலமாகவும் அவதூறாகவும் பேசி வருகின்றனர். அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜய் டிவியில் பிக்பாஸ் 2 என்ற நிகழ்ச்சி கடந்த 40 நாள்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஒரு வாரம் நடந்த நிகழ்வுகளை சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார். அப்போது அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்க்க கட்சி சம்பந்தமான பேச்சுக்களை பேசுகிறார்.


இது அவரது கட்சியை வளர்க்க அவர் எடுத்துள்ள யுக்தி, மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார்.

அந்த நிகழ்ச்சியில் சர்வாதிகாரி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஜஸ்வர்யா என்ற பெண் சர்வாதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்த டாஸ்க்கில் சர்வாதிகாரியாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா அங்கு இருப்பவர்களை கொடுமை படுத்தும் பல்வேறு செயல்களை செய்கிறார். இந்த டாஸ்க்கில் என்ன பேச வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை முன்கூட்டியே இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனமும், நடிகர் கமல்ஹாசனும் கூறுகின்றனர்.

இந்த டாஸ்க்கில் தமிழ்நாட்டில் இதற்கு முன் சர்வாதிகாரி ஆட்சி செய்தவர்களின் நிலை என்ன ஆனது என்பது போன்று பேசிக்கொள்ளும் காட்சி ஒளிபரப்பானது.

எனவே, தமிழகத்தை அமைதிப் பூங்காவாக ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்.

மேலும், ஜெயலலிதாவை சர்வாதிகாரி போல சித்திரிக்கும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இந்த நிகழ்ச்சியைத் தயாரிக்கும் நிறுவனத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!