காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமரணம்… கொலையா..? தற்கொலையா..?


கடலூர் மஞ்சக்குப்பம் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது 35). இவரது மனைவி இந்துமதி(25). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் 1 மகனும், 4 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளது. வீரக்குமார் தற்போது தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை இந்துமதி திடீரென்று இறந்து விட்டார். வீரக்குமாரின் சொந்த ஊரான நெல்லிக்குப்பம் மேல்பாதியில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பண்ருட்டி அருகே உள்ள மேல் கவரப்பட்டில் வசித்து வரும் இந்துமதியின் தாய் ஜெயபாரதியிடம் உறவினர்கள் கூறினர்.

இதைகேட்டதும் ஜெயபாரதி அதிர்ச்சி அடைந்தார். உடனே ஜெயபாரதியும், அவரது மகன் இளமாறனும் நெல்லிக்குப்பம் மேல் பாதியில் உள்ள வீரக்குமார் வீட்டுக்கு சென்றனர். இந்துமதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்பு இந்துமதி எப்படி இறந்தார்? என கேட்டனர். அதற்கு அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக வீரக்குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதில் சந்தேகம் அடைந்த இந்துமதியின் தாயார் என் மகள் எங்கு தற்கொலை செய்து கொண்டாள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் கடலூரில் இறந்ததாக கூறினர். பின்னர் ஏன்? உடலை நெல்லிக்குப்பம் மேல்பாதிக்கு கொண்டு வந்தீர்கள் என்று ஜெயபாரதி கேட்டார். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீசில் ஜெயபாரதி புகார் செய்தார். அதில் என் மகள் சாவில் சந்தேகம் உள்ளது. அவள் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் கூறுகிறார்கள். இதை நாங்கள் நம்பவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் இறந்து போன இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!