கர்ப்பிணி பெண்ணை சேற்றில் அமுக்கி கொன்ற கொடூரம்..!


திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து கணவர் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி புஷ்பா (வயது 28). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2 வயதில் வினிதா என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தற்போது புஷ்பா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று தனது மகளை வீட்டில் விட்டு விட்டு புஷ்பா மட்டும் அருகில் உள்ள பம்பு செட்டில் குளிக்க சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

அவரை தேடி சென்ற போது அருகே உள்ள பம்பு செட் கரும்பு தோட்டத்தில் புஷ்பா பிணமாக கிடந்தார். அவரது முகம் சகதியில் அமுங்கிய நிலையில் காணப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பாலபந்தல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புஷ்பாவின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது கழுத்தில் துண்டால் இறுக்கி கொலை செய்திருப்பதற்கான அடையாளம் காணப்பட்டது. மேலும் புஷ்பா கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க சங்கிலி மற்றும் காதில் கிடந்த கம்மல் ஆகியவைகளை காணவில்லை.

இந்த கொலையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. அது புஷ்பா பிணமாக கிடந்த இடத்தை மோப்பம் பிடித்து அங்கும் இங்குமாக ஓடியது.

பின்னர் நேராக புஷ்பாவின் வீட்டுக்குள் சென்று படுத்து கொண்டது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதனால் போலீசாருக்கு புஷ்பாவின் கணவர் ராமதாஸ் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் மனைவியை கொலை செய்து விட்டு, நகையை பறித்து கொண்டு, புஷ்பாவின் உடலை அங்கே போட்டு விட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இது தொடர்பாக புஷ்பாவின் கணவர் ராமதாஸ், மாமனார் தேவநாதன் மற்றும் உறவினர் சந்தோஷ் ஆகியோரை பிடித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!