இறுதி நேரத்தில் தப்பிக்க போராடிய அந்த ஒரு நபர் – 11 பேர் மரணத்தில் அதிர்ச்சி தகவல்..!


டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஒரே ஒருவர் கடைசி கட்டத்தில் உயிர் தப்பிக்கப் போராட்டியுள்ளார் என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் வயதான பெண்மணி ஒருவர் தரையில் சடலமாகவும் கிடந்தார். உயிரிழந்தவர்கள், நாராயண் தேவி (77), அவரது 2 மகன்கள் புவனேஷ் பாட்டியா (50), லலித் பாட்டியா (45), அவர்கள் மனைவி சவிதா (48), டினா (42), நாராயண் மகள் பிரதிபா (57), பேரக் குழந்தைகள் பிரியங்கா (33), நீது (25), மோனு (23), துருவ் (15), சிவம் (15) என்பது தெரிய வந்தது. அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். இதனால் இது கொலையா? தற்கொலையா? எனக் காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் வீட்டில் போலீசார் ஆய்வு நடத்தினர்.

அப்போது வீட்டிற்குள்ளேயே கோயிலை கட்டி அவர்கள் வழிபாடு நடத்தியது தெரியவந்தது. வழிபாட்டு முறையும் வித்தியாசமாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே மூட நம்பிக்கையால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு துண்டுக் காகிதங்கள், டைரிகளில் சொர்க்கத்தை அடைய தற்கொலைதான் வழி என்று எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 11 பேர் உயிரிழந்த நிலையில், 11 டைரிகள் கைப்பற்றப்பட்டதாகவும், அவை 11 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல் வீட்டின் சுவரில் மொத்தம் 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் நீட்டிக்கொண்டிருந்துள்ளன. ஆனால் அவை தண்ணீர் வருவதற்கான குழாய்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. தொடர்ச்சியாக பல்வேறு மர்ம தடயங்கள் கிடைத்து வருவதால் போலீசாருக்கே குழப்பம் ஏற்பட்டுள்ளது.


இந்த விவகாரத்தில் மர்ம மரணங்களுக்கு முக்கிய காரணமாக சந்தேகிக்கப்படுவது லலித் சுண்டவத் என்பவர். தொழிலதிபரான லலித், பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தனது தந்தை கோபால் தாஸ் இன்னும் உயிரோடு இருப்பதாக நினைத்து மாய உலகில் வாழ்ந்துள்ளார்.

மோட்சத்தை அடைய தற்கொலை தான் வழி என்று தனது தந்தை கூறியதாக குடும்பத்தினரிடம் லலித் தெரிவித்துள்ளார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், மரணங்கள் குறித்து, ஆன்மாவின் மர்மங்கள் குறித்தும் லலித் பாட்டியா ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், லலித்தின் மொபைல் போன் மற்றும் டைரிகளை ஆராய்ந்த போலீசார் பல்வேறு தகவல்களை கூறியுள்ளனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘அவரது மொபைல் போன் தகவலின் படி, அமானுஷ, பேய் தொடர்பான நிகழ்ச்சிகளை யூடியூப் மற்றும் மற்ற இணையதளங்களில் பார்த்துள்ளார்’ என்றார். அதே போல், ‘மர்மமான முறையில் தூக்கிலிட்டு இறந்து போனதாக கூறப்படும் 11 பேரும் 10 நாட்களுக்கு முன்பாக உயிரிழப்பதற்கு தயாராகி இருக்க வேண்டும்’ என்றார்.

இந்த மர்ம மரணத்தின் புதிரை அவிழ்க்க போலீசார், அவர்களது உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டினர், குடும்ப சொந்தம், தொழிலதிபர்கள் உட்பட 130 பேரிடம் விசாரித்துள்ளனர். இந்நிலையில், மரணமடைந்த அந்த 11 பேரில் புவனேஷ், கடைசி நேரத்தில் உயிர் பிழைக்க போராடியிருக்கிறார் என்கிற தகவலை தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

’அவரது ஒரு கை, கழுத்தில் மாட்டியிருந்த கயிறை பிடித்து இழுப்பது போல இருந்தது. கைகளில் கயிறுகள் இறுக்கமாக கட்டப்படாமல் இருந்தன. இதனால் அவர் கடைசி நேரத்தில் தற்கொலையில் இருந்து உயிர் பிழைக்கப் போராடியிருக்கிறார். ஆனால் அந்த கடைசி கட்ட முயற்சி பலனளிக்காமல் போய்விட்டதாக சந்தேகிக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

இந்த மரணம் போலீசாருக்கு இன்னும் மர்மமாகவே இருக்கிறது. விசாரணை மேலும் நடந்து வருகிறது.-Source: puthiyathalaimurai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!