ஐஸ்வர்யா – ஷாரிக் காதல் சர்ச்சையால் சூடுபிடிக்கும் பிக்பாஸ்..!


ஓவியா-ஆரவ் போல பிக்பாஸ்-2 விலும் ஷாரிக்- நடிகை ஐஸ்வர்யா தத்தா இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள காதல் சர்ச்சையால் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது.

பிக் பாஸ் முதல் பாகத்தில் நடிகை ஓவியா – ஆரவ் இடையேயான காதல் சர்ச்சையை யாராலும் மறக்க முடியாது. நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஆரவ்வை, நடிகை ஓவியா காதலித்தார். இந்த காதலை ஆரவ் ஏற்காததால் ஓவியா மனத்தளவில் மிகவும் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரின் நடவடிக்கையும் மாறின. அடிக்கடி ஐ லவ் யூ எனக் கூறியும், தொடர்ந்து ஆரவ் மறுக்கவே, ஒரு கட்டத்தில் அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்தார். காதல் தோல்வியால் போட்டியை விட்டு வெளியேறி எதிர்பாராத திருப்பத்தை கொடுத்தார் ஓவியா.

இதேபோல், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியிலும் மற்றுமொரு காதல் சர்ச்சை உருவாகியுள்ளது. போட்டியாளர்களில் ஒருவரான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் பட நடிகை ஐஸ்வர்யா தத்தா, உமா ரியாஷ்கான் – ரியாஸ்கான் நட்சத்திர தம்பதியின் மகனான ஷாரிக்-கும் இடைய காதல் சர்ச்சை எழுந்துள்ளது.

ஐஸ்வர்யா தத்தா மீதான காதலை ஷாரிக் தெரிவித்தார். இதுபற்றி தன் நண்பர்களான யாஷிகா, மஹத் ஆகியோரிடமும் விவாதித்துள்ளார் ஐஸ்வர்யா. இந்த இருவரின் காதல் தொடர்பான சர்ச்சை நேற்று ஒளிபரப்பானது.

இதில் ஐஸ்வர்யா, மஹத், யாஷிகா இடையே நிகழ்ந்த உரையாடல்களை வைத்து என்ன பிரச்னையை விவாதித்தார்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. எதனால் யாஷிகா மீது ஐஸ்வர்யா கோபம் கொண்டார் என்பது புதிராக உள்ளது. ஏற்கெனவே ஒரு காதலி இருந்தும், ஏன் என்னை காதலிக்கிறாய் என்று ஷாரிக் மீது வெளிப்படையாகவே குற்றம் சுமத்தினார் ஐஸ்வர்யா.

இதுகுறித்து ஐஸ்வர்யா, யாஷிகா, மஹத், ஷாரிக் ஆகியோரிடையே நடந்த கருத்து மோதல்களாக நேற்றைய நிகழ்ச்சி சென்றது. மேலும், நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்ல எண்ணுகிறேன். என்னை எல்லோரும் நாமினேட் செய்யுங்கள் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஐஸ்வர்யா.

ஷாரிக் மீது அவருக்கு ஒருவிதமான உணர்வு உள்ளதால், அவரிடமிருந்து விலகி இருக்க எண்ணுகிறார் என தெரிகிறது. நேற்று முளைத்த இந்த கருத்து மோதல்களால் ஐஸ்வர்யா – ஷாரிக் இடையேயான காதல் சர்ச்சை வரும் நாள்களில் மேலும் விஸ்வரூபம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!