இதே மனைவி வேண்டாம்; அரச மரத்தை சுற்றி வேண்டுதல் செய்யும் விசித்திர ஆண்கள்..!


தன்னுடைய மனைவி மீண்டும் தனக்கு கிடைக்கக் கூடாது என்று, கணவர் சிறப்பு பூஜை ஒன்றை செய்துள்ளார்.

கணவன் நீண்ட ஆயுளோடு இருக்க, இந்து மதப் பெண்கள் செய்யும் பூஜை வட சாவித்திரி விரதம். அதில் கணவர் அனைத்து நலன்களும் பெற்று, அடுத்த 7 ஜென்மங்களுக்கும் தனக்கே கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வர். இந்நிலையில் இதற்கு நேர் மாறான நிகழ்வு, கர்நாடக மாநிலம் சிக்கோடி நகரில் நிகழ்ந்துள்ளது.

இந்நகரைச் சேர்ந்த சசிதர் ராம்சந்திர கோபர்தே, ’புருஷ் சந்த்வன் கேந்திரா’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இது மனைவிமார்களால் பெரும் துன்பத்திற்கு ஆளாகும் கணவன்களுக்கு உதவுவதற்காக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சசிதர், தனது திருமண நாளுக்கு முன்பாக, வட சாவித்திரி பூஜையை செய்துள்ளார்.

அப்போது, இந்த ஜென்மத்தில் தனக்கு வாய்த்த மனைவி, அடுத்த ஜென்மத்தில் கிடைக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டார். இதுதொடர்பாக சசிதர் ராம்சந்திர கோபர்தே கூறுகையில், எனது மனைவி வரதட்சணை கொடுமை தொடர்பாக பொய்யான வழக்கை தன் மீதும், தனது பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள் மீதும் பதிவு செய்துள்ளார்.

அடுத்த ஜென்மத்தில் நான் திருமணம் செய்து கொள்ளாமல், பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து இறக்க வேண்டும். இதுபோன்ற மோசமான மனைவி எனக்கு வேண்டாம். எனவே வாழை மரத்திற்கு தாலி கட்டி, சடங்குகள் செய்துள்ளேன் என்று குறிப்பிட்டார்.

இந்து மதப் பெண்கள் ஆண்டுதோறும் அனுசரிக்கும் சாவித்திரி பூஜை, நேற்று வடக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், கோவா ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!