காதல் மனைவி பார்க்க வராத விரக்தியில் 2 மகன்களை கொன்று கணவர் தற்கொலை..!


போரூர் காமதேனு நகரைச் சேர்ந்தவர் ஹபிப் ரஹ்மான் (38). இவரது மனைவி இலங்கையைச் சேர்ந்த அனிஷா. இவர்களுக்கு நைப் (7), ரியான் (3) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். குடும்பத் தகராறு காரணமாக அனிஷா கோபித்துக் கொண்டு கணவன், மகன்களை விட்டுவிட்டு இலங்கைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று ஹபிப் ரஹ்மான் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதாக வந்த புகாரை அடுத்து மதுரவாயல் போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு படுக்கை அறையில் ஹபிப் ரஹ்மான் மற்றும் அவரது 2 மகன்கள் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற அனிஷா கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் சென்னை வந்துள்ளார். ஆனால், அவர் கணவரையோ, மகன்களையோ பார்க்கச் செல்லவில்லை. இந்த விரக்தியில் ஹபிப் ரஹ்மான் மகன்களுக்கு விஷத்தைக் கொடுத்து, பின்னர் தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.-Source: tamil.thehindu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!