நாயைக் கொன்று புதைத்து சாலை அமைத்த தனியார் நிறுவனம் – பொதுப்பணித்துறை நோட்டீஸ்..!


ஆக்ராவில் சாலைப் பணி மேற்கொண்ட தனியார் நிறுவனம் நாயைக் கொன்று புதைத்ததாக அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் சாலை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் சார்பில் பரேபூர் சாலையில் வேலை நடந்தபோது, ஒரு நாயைக் கொன்று புதைத்து அதன் மீது சாலை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

போலீசில் இதுபற்றி புகாரும் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், மனுதாரர் குறிப்பிட்ட சாலைக்கு சென்று நாயின் உடலை தோண்டி எடுத்து அப்புறப்படுத்தினர்.

மேலும், சாலைப் பணி மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சாலைப் பணிக்காக நாயை பலி கொடுத்தார்களா? அல்லது இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்தாமல் அப்படியே சாலை போட்டார்களா? என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!