80 வயது பிச்சைக்கார மூதாட்டியிடம் செல்லாத ரூ.70 ஆயிரம் நோட்டுகள்

திருப்பதி அருகேயுள்ள குந்திரபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தம்மா (80). இவரை உறவினர்கள் யாரும் கண்டுகொள்ளாமல் கைவிட்டனர். எனவே திருப்பதி வந்த அவர் கரி மாரியம்மன் கோவில் அருகே தங்கி பிச்சை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மயங்கி கிடந்தார். ரோட்டில் சென்றவர்கள் பார்த்து திருப்பதி மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அங்கு சென்றார். கந்தம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தார். அப்போது பிச்சை எடுத்து சேர்த்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கந்தம்மாவிடம் இருந்தது.

கடந்த ஆண்டு மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தது. அதில் 70 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதை பாங்கியில் கொடுத்து மாற்ற முடியாததால் அவற்றையும் தானே வைத்து இருந்தது தெரியவந்தது.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கந்தம்மா தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவரது பணத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.

உறவினர்களால் அனாதையாக கைவிடப்பட்ட கந்தம்மாவுக்கு திருமணமாகி விட்டது. அதன்பிறகு அவர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகருக்கு வந்து தங்கியிருந்தார். 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது சொந்த கிராமமான குந்திரபாக்கம் வந்தார்.

அவருக்கு ஒரு மகள் இருந்தார். அவர் மரணம் அடைந்துவிட்டதை அடுத்து ஆதரவற்ற அனாதையானார். எனவே கடந்த 5 ஆண்டுகளாக திருப்பதி கரிமாரியம்மன் கோவிலில் தங்கி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

இவருக்கு மாணிக்யா காரி என்ற தம்பி இருக்கிறார். அவர் திருப்பதியில் தங்கி இருக்கிறார். அவரை நாங்கள் யாரும் பிச்சை எடுக்க வறுபுறுத்தவில்லை. எங்களுடன் தங்க மறுக்கிறார் என அவர் கூறினார். கந்தம்மாவுக்கு உறவினர்களுடன் நல்ல உறவு இல்லை. தனது பணத்தை அவர்கள் பறித்து கொள்வார்கள் என பயந்து தனியாக ஒதுங்கி வாழ்கிறார்.-Source:Maalaimalar

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.