மாணவியை கடத்திச் சென்று கல்யாணம் செய்த பெயின்டர்! காட்டிக் கொடுத்த நண்பன்!


மாணவியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்த பெயின்டரை போலீசார் கைது செய்தனர். நண்பன் கொடுத்த வாக்குமூலத்தால் தேனி பதுங்கியவர்களை போலீசார் மீட்டனர்.

சென்னை பம்மல், பசும்பொன் நகரை சேர்ந்தவர் ராஜபாண்டி பெயின்டர் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் பம்மலில் இருந்து பல்லாவரத்துக்கு பேருந்தில் வேலைக்குச் செல்வார். அப்போது, அப்பேருந்தில் பயணம் செய்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த 17 வயது நர்சிங் மாணவியுடன் ராஜபாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் பல இடங்களில் ஜோடியாக, பீச், சினிமா என சென்னையில் சுற்றித் திரிந்து தங்களது காதலை வளர்ந்து கொண்டனர். இவர்களின் காதல் விவகாரம் இவர்களின் பெற்றோருக்கு தெரியவர இருவரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், விரக்தியில் இருந்த காதல் ஜோடி கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவானார்கள்.

இதுகுறித்து, மாணவியின் பெற்றோர், தனது மகளை ஆசைவார்த்தை கூறி ராஜபாண்டி கடத்திச் சென்றுவிட்டதாக சங்கர் நகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியனின் நண்பர்களை அழைத்து விசாரித்தனர். அதில் ஒருவர், வீட்டைவிட்டு வெளியேறி இருவரும் தேனி மாவட்டத்திற்கு சென்று பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, அங்குள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கியிருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, சங்கர்நகர் போலீசார் தேனி மாவட்டத்துக்கு விரைந்து சென்று, காதல் ஜோடி தங்கியிருத்த வீட்டை சுற்றிவளைத்து ராஜபாண்டியை கைது செய்தனர். பின்னர், மாணவியை மீட்டு விசாரித்தனர். அப்போது, மாணவி பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்ததால், போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பின்னர், ராஜபாண்டியை சென்னை கொண்டு வந்த போலீசார், சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!