நடத்தையில் சந்தேகம் – மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்..!


புதுவை லாஸ்பேட்டை அசோக் நகர் செண்பகராமன் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 49). இவர் லாஸ்பேட்டையில் உள்ள அரசின் மைய சமையல் கூடத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மகாலட்சுமி, தமிழ்ச்செல்வி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

ஆறுமுகம் மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வந்து சரஸ்வதியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு தகராறு செய்வாராம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவனிடம் கோபித்துக்கொண்ட சரஸ்வதி அருகில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை ஆறுமுகம் நேற்று முன்தினம் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஆறுமுகம் மரக்கட்டையினால் சரஸ்வதியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

மனைவி இறந்துவிட்டதை அறிந்த ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக கதவினை சாத்திவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
சரஸ்வதி கொலை செய்யப்பட்ட விவரம் நேற்று காலைதான் தெரியவந்தது. இது குறித்து சரஸ்வதியின் மருமகன் பிரதாப் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் வரை ஓடிய நாய், யாரையும் கவ்விபிடிக்கவில்லை.

சம்பவ இடத்துக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!