போலீஸாரின் விசாரணையால் வாலிபர் தற்கொலை… நடந்தது என்ன?


தெலுங்கான மாநிலத்தில் கணவன் – மனைவி தகராறில் போலீசார் தன்னை அடித்து துன்புறுத்தியதாக செல்பியில் மரண வாக்குமூலம் அளித்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தலகொண்டாப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பத்லவத் ராஜு.

திருமணமான இவர் தனது மனைவியையும், மாமனாரையும் அடித்து துன்புறுத்தியதாக வந்த தகவலின் அடிப்படையில் கடந்த 12-ம் தேதி ராஜுவை அழைத்து சமரசம் பேசிய போலீசார் அவரை அறிவுறுத்தி அனுப்பி வைத்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், போலீஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய ராஜு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது கைபேசியை எடுத்துப் பார்த்த ராஜுவின் உறவினர்கள், அதில் இருந்த ஒரு வீடியோ செல்பியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையின்போது போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவமானத்தால் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அந்த செல்பியில் ராஜு பேசி இருந்தார்.

இதனால், ராஜுவை தற்கொலைக்கு தூண்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபராபாத் போலீஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக சைபராபாத் போலீசார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!