கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் எட்டி உதைப்பு – இரட்டை குழந்தைகளுக்கு நடந்த பயங்கரம்..!


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மரத்தான் தோப்பை சேர்ந்தவர் தயாநிதி (வயது 24), டிரைவர். இவரது மனைவி காவேரி (22). இவர்கள் கடந்த 9 மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது காவேரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் காவேரி, அவரது மாமியார் லட்சுமி ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தனர்.

அந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை உடைக்க ஆரம்பித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவேரி மற்றும் லட்சுமி ஆகியோர் சுரேசை தடுத்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கர்ப்பிணி பெண் காவேரியை எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் வலியால் துடிதுடித்து காவேரி கீழே விழுந்து அலறினார். இதையடுத்து சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கர்ப்பிணி பெண் காவேரியை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது காவேரி மற்றும் குழந்தை ஆபத்தான நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் காவேரியை மட்டும்தான் டாக்டர்களால் காப்பாற்ற முடிந்தது. வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் இறந்தே பிறந்ததால் காப்பாற்ற முடியவில்லை.

இதையறிந்த தாய் காவேரி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் கல்நெஞ்சையும் கரைய வைப்பது போல் இருந்தது.

இது குறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்ததால் இரட்டை குழந்தைகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!