போலீஸ் நிலையத்தையே மசாஸ் நிலையமாக மாற்றிய உதவி ஆய்வாளர்…!


தெலுங்கானா மாநிலத்தில் பெண் போலீஸ் கான்ஸ்டபிளை மசாஸ் செய்ய வைத்த வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் கட்வாலா மாவட்டத்தில் உள்ள ஜோகுலம்பா ஆயுதப்படையில் துணை உதவி ஆய்வாளராக இருப்பவர் ஹசன். இந்நிலையில், ஆயுதப்படை அலுவலகத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் ஹசனுக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ அம்மாநில செய்தி ஊடகங்களில் நேற்று வெளியானது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ குறித்து விசாரிக்க சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டு இருந்தார். விசாரணையில், சில மாதங்களுக்கு முன்னர் அலுவலகத்தில் முதுகுவலி காரணமாக பெண் போலீஸை மருந்து தேய்த்து விட ஹசன் கூறியதன் பேரில், அந்த கான்ஸ்டபிள் மருந்து தேய்த்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பணி விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக உதவி ஆய்வாளர் ஹசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டை ஹசன் மறுத்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை எனவும், போலி வீடியோ மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!