மகளை கொன்று இளம்பெண் தற்கொலை..? பின்ணனியில் நடந்தது என்ன..?


புதுவை வைத்திக்குப்பம் கங்கையம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுஜித்ரா (வயது 27). இவருடைய கணவர் சுரேஷ். இவர்களுக்கு நிவேதா (10) என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

சுஜித்ரா தனது மகள் நிவேதாவுடன் வசித்து வந்தார். சுஜித்ரா ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். முத்தியால்பேட்டையில் தனியார் பள்ளி ஒன்றில் நிவேதா 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

இதற்கிடையே சுஜித்ரா தான் பணியாற்றி வந்த வரவேற்பாளர் பணியில் இருந்து விலகினார். ஏற்கனவே கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த சுஜித்ரா வேலையை விட்டதால் வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சுஜித்ராவின் வீட்டிற்கு அவருடைய உறவினர் நேற்று மாலை சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. கதவை தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது சுஜித்ரா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித் தார். தகவல் அறிந்ததும் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சோலைநகர் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சுஜித்ராவின் மகள் நிவேதாவும் இறந்துகிடப்பது தெரியவந்தது. சுஜித்ரா, நிவேதா ஆகியோரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சோலை நகர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவனை பிரிந்ததாலும், வேலையில்லாமல் இருந்ததாலும் சுஜித்ரா பணக்கஷ்டத்தில் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்க மாத்திரைகளை தின்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும் சுஜித்ரா அவருடைய மகள் நிவேதாவுக்கு தூக்க மாத்திரைகளை குளுக்கோசில் கலந்து கொடுத்து கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!