இளைஞர்களின் மார்பில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என குறியீடு – காவல்துறை தேர்வில் அதிர்ச்சி..!


மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் அம்மாநில காவல்துறைக்கு ஆள்சேர்க்கும் பணி நடைபெற்றது. இதில் அம்மாநில இளைஞர்கள் கலந்துக்கொண்டனர். மருத்துவ பரிசோதனையின் போது இளைஞர்கள் வரிசையில் நின்ற போது அவர்கள் எந்த பிரிவினர் என்பது தொடர்பாக அவர்கள் மார்பில் எழுதப்பட்டது. எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. என இளைஞர்களின் மார்பில் எழுதப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுடன் பகிரப்பட்டு வருகிறது.

புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகிய நிலையில் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

மாவட்ட எஸ்பி விரேந்திர குமார் சிங் பேசுகையில், “ஆள்சேர்ப்பு முகாமிற்கு வந்த இளைஞர்களின் மார்பில் அவர்களுடைய பிரிவை எழுதவேண்டும் என்று எதுவும் உத்தரவிடப்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குற்றம் உறுதியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்,” என்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இருநாள் பயணமாக மாநிலத்திற்கு சென்ற நிலையில் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு தெரியவந்து உள்ளது. டிஜிபி ரிஷி குமார் சுக்லா பேசுகையில், மோசமான எண்ணத்தில் இச்சம்பவம் நடைபெறவில்லை என்றார். “உடல்தகுதி தேர்வில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறது என்பதை உறுதிசெய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது,”என நியாயப்படுத்தி உள்ளார்.

மாநில சுகாதாரத் துறையின் தகவல்களின்படி 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கிறது. இளைஞர்களின் நலனுக்காகவே இந்த குறியீடு வைக்கப்பட்டது என மாவட்ட நிர்வாகமும் கூறிஉள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!