காதலி வீட்டிற்கு பெண் கேட்டு சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்..!


காதலியைப் பெண் கேட்டு அவரது வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற இளைஞர், பெண் தர மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அந்த இளைஞர் குடும்பத்தினர் நம்மிடம் பகிர்ந்த தகவல்கள் பின்வருமாறு..

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அ.தி.மு.க நகரசெயலாளராக இருப்பவர் சொளந்தரராஜன். இவர் கடந்த முறை திருத்தணி நகராட்சி தலைவராக இருந்தவர். இவருடைய இரண்டாவது மகள் அஸ்வினி டெல்லியில் உள்ள கரோல்பாக் பகுதியில் தங்கி ஐ.ஏ.எஸ் கோச்சிங் கிளாஸ் படித்து வருகிறார்.

அஸ்வினி ஏற்கனவே சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிக்கும் போது ராகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராகேஷ் திருத்தணி அருகே உள்ள புளியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். இருவருக்குமான பழக்கம் பின்னர் காதலாக மாறியது. ராகேஷ் மும்பையில் உள்ள ஐ.என்.எஸ் ட்ரிக்கண்ட் போர்க் கப்பல் படையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். டெல்லியில் அஸ்வினி தனியாக இருக்கும் போது மும்பையில் இருந்து டெல்லிக்கு வந்து அஸ்வினியை சந்தித்துப் பேசுவார் ராகேஷ்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக ராகேஷ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஒரு முறை அஸ்வினி, பதிவு திருமணம் செய்து கொள்ளக் கடந்த ஆண்டு முடிவு செய்து ராகேஷை வரச்சொல்லி விண்ணப்ப படிவத்தைக் கூட பூர்த்தி செய்திருந்தார். ஆனால் ராகேஷ் அதற்கு ‘அம்மா அப்பா சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் பொறுமையாக இரு’ என்று சொன்னாராம்.


காதலிக்கும் போது அஸ்வினி ராகேஷுக்கு பல நினைவு பொருட்களை வாங்கிக் கொடுத்ததாக ராகேஷ் அம்மா நம்மிடம் காட்டினார். இந்நிலையில் நேற்று மாலை ராகேஷ் மற்றும் அவரது அக்கா மற்றும் குடும்பத்தினருடன் அஸ்வினி வீட்டுக்குப் பெண் கேட்கச் சென்றுள்ளனர். அப்போது சொளந்தரராஜன் வீட்டில் இருந்துள்ளார். வந்தவர்களை வீட்டுக்கு உள்ளே வரசொல்லி உட்கார வைத்துவிட்டு வந்த காரணம் கேட்டுள்ளார். அப்போது ராகேஷ் ‘நானும் அஸ்வினியும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வருகிறோம்’ என்று சொல்லி இருக்கிறார்.

அப்போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் ராகேஷ் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. எப்படித் தீ பற்றியது யார் தீ வைத்தார்கள் என்ற விபரம் தெரியவில்லை. ராகேஷ் தீயில் எரிந்து கொண்டிருக்கும்போதே அஸ்வினியின் அப்பா சொளந்தரராஜனும் அவரது மகன் அருண் ஆகிய இருவரும், எரிந்து கொண்டிருக்கும் ராஜேஷை அடித்ததாகச் சொல்கிறார் ராகேஷின் தங்கை ப்ரீத்தி.

தீக்காயத்தை அனைத்துவிட்டு முதலுதவி செய்ய திருத்தணி அரசு மருத்துவமனைக்குச் செல்லும்போது அங்குப் போக விடாமல் தடுத்து நிறுத்தி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்குப் காயம் அதிகமாக உள்ளதால் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குப் தீவிர சிகிச்சை பிரிவில் ராகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகேஷின் வீடு தற்போது மயான பூமியைப்போல உள்ளது.

ராகேஷ் தற்கொலை முயற்சி செய்ததாகக் கூறப்படும் நிலையில், ராகேஷ் தாக்கப்பட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அஸ்வினி குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!