கத்துவா சிறுமியை கொன்ற சஞ்சி ராமின் பரபரப்பு வாக்குமூலம்..!


கதுவா சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

கதுவா வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி இது பற்றி கூறுகையில், முஸ்லிம் பக்கர்வால் சமுதாய மக்களை மிரட்டவே, கதுவா சிறுமியை கடத்தி வந்து அடைத்து வைத்துள்ளார் சஞ்சி ராம்.

ஆனால், அச்சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதும், அந்த குற்றத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதை அறிந்த பிறகே, மகனைக் காப்பாற்ற சிறுமியைக் கொலை செய்ய முடிவெடுத்ததாக விசாரணையின் போது கூறியதாகத் தெரிவித்துள்ளார்

கதுவா சிறுமி வழக்கில், சஞ்சி ராம், அவரது மகன் விஷால், மற்ற 5 பேர் மற்றும் ஒரு சிறார் ஆகிய 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிறுமி கடந்த ஜனவரி 10ம் தேதி கடத்தப்பட்டுள்ளார். அன்றைய தினமே ராமின் உறவுக்கார பையனான சிறார் குற்றவாளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

சிறுமி 10ம் தேதி கடத்தி வரப்பட்ட நிலையில், 13ம் தேதி தான் அவர் பலாத்காரத்துக்கு உள்ளான விஷயம் தனக்கு தெரிய வந்ததாகவும், உறவுக்கார பையன்தான் அதனை ஒப்புக் கொண்டதாகவும் சஞ்சி ராம் கூறியுள்ளார்.

இந்த பலாத்காரத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதால், அவனைக் காப்பாற்றவே கதுவா சிறுமியை கொலை செய்ய முடிவெடுத்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், முஸ்லிம் பக்கர்வால் மக்களை மிரட்ட நினைத்த தனது திட்டமும் இதன் மூலம் நிறைவேறும் என்று கருதியுள்ளார் அவர்.

ஜனவரி 14ம் தேதி கதுவா சிறுமியைக் கொலை செய்து, அங்கு தனது மகன் மாட்டிக் கொள்ளாத வகையில் எந்த தடயமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் சஞ்சி ராம் நினைத்துள்ளார். ஆனால், அவர் நினைத்தபடி திட்டம் நிறைவேறவில்லை.


பிறகுதான், ஒரு வாகனத்தில் ஏற்றி கதுவா சிறுமியின் உடல் ஹிராநகர் கால்வாய்க்கு அருகே வீசப்பட்டுள்ளது.

இந்த கடத்தலுக்கான திட்டம் ஜனவரி 7ம் தேதியே தீட்டப்பட்டு, அதற்கான போதைப் பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ராம் மீது கொலை, கடத்தல், தடயங்களை அழித்தல் பிரிவுகளின் கீழும், மண்ணு மீது கடத்தல் வழக்கும், மற்ற 3 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறார் குற்றவாளி மீது, கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கதுவா சிறுமியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த போது, தனது மகன் பிடிபட்டு விடக் கூடாது என்பதற்காக, சிறார் குற்றவாளியை, குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படியும், விரைவில் அவரை விடுதலை செய்ய வைப்பதாகவும் சஞ்ஜி ராம் கூறியுள்ளார்.

இதையடுத்தே அந்த சிறார் தனது குற்றத்தை காவல்நிலையத்தில் சென்று ஒப்புக் கொண்டுள்ளார்.

முன்னதாக, ஜனவரி 15ம் தேதி தான் செய்த கொலை குறித்து அந்த சிறார் குற்றவாளி தனது நண்பன் அமித் ஷர்மாவிடம் கூறியுள்ளான்.

அமித் ஷர்மாவின் சாட்சியம் நீதிமன்றத்தில் நேரடியாக பதிவு செய்யப்பட்டு முக்கிய சாட்சியாக வைக்கப்பட்டுள்ளது.-Source: dinamani

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!