ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கத்தை அமைக்க நாம் இடமளிக்கத் தயாராக உள்ளோம். தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறி எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
மத்திய குழுவில் எம்மை நிராகரித்தால் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணையவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி சர்வதேச விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்
தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அல்லது நாம் வெளியேறி எதிரணியில் அமரவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையும் நகர்வுகளும் எமக்கு பொருந்தக்கூடிய ஒன்றல்ல. ஆகவே எம்மால் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாது. இந்த நிலைப்பாட்டினை நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தெரிவித்துவிட்டோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கம் ஒன்று உருவாக நாம் இடமளிக்கின்றோம். அவர்களின் தனி அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆட்சியை முன்னெடுத்து செல்லட்டும். நாங்கள் எதிர்க்கட்சியாக செயற்படுகின்றோம். அடுத்த பொதுத் தேர்தலில் நாம் எமது ஆட்சியினை உருவாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளோம்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவில் என்ன தீர்மானம் எடுக்கப்படுகின்றதோ அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவில் நாம் முன்வைத்த கோரிக்கைக்கே ஆதரவு அதிகமாக உள்ளது. நாம் தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிரணியில் அமருவோம் என்ற தீர்மானத்தை மத்திய குழுவில் ஏற்றுகொள்ள வேண்டி வரும். அதனை விரும்பாத நபர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்வார்கள். இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டு துண்டுகளாக மாற்றம் பெறவும் முரண்படவும் எமது தரப்பில் ஒரு சிலர் முன்னெடுத்த காட்டிக்கொடுப்பு மட்டுமே காரணமாகும்.
கூட்டு எதிரணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் எந்த முரண்பாடுகளும் இல்லை. எனினும் ஒரு சிலரது சதித்திட்டங்களின் மூலமாகவே நாம் இரு அணிகளாக மோதிக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இப்போதும் இரு அணியையும் இணைக்க நாம் முயற்சித்து வருகின்றோம். எனினும் அது இலகுவான காரியம் அல்ல என்பதும் எமக்குத் தெரியும். எனினும் மஹிந்த ராஜபக் ஷ அணியினரும் அவர்களது அணியில் இணைந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆகவே அவர்களுடன் இணைந்து செயற்படுவதிலும் எந்த சிக்கலும் இல்லை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளை இணைத்து மீண்டும் பலமான அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அந்த முயற்சியில் நாம் செயற்பட்டு வருகின்றோம். அதனை குழப்ப சிலர் முயற்சித்தும் வருகின்றனர். அவர்களை நிராகரித்து எமது பயணத்தை முன்னெடுத்து செல்லவே நாம் விரும்புகின்றோம்.source-virakesari
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி