கள்ளக்காதலால் 4 வயது பிஞ்சுக் குழந்தைக்கு நடந்த கொடூரம்..!!


குன்றத்தூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம் என்ற சரவணன், வக்கீல். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது 4 வயது மகள் கோசிகா. கோவூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஜெயந்தி குழந்தை கோசிகாவுடன் குன்றத்தூரில் மூன்றாம்கட்டளையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாரத்தில் இரண்டு நாட்கள் மகள் கோசிகா தன்னுடன் இருக்க வேண்டும் என்று சரவணன் கூறினார். இதனால் குழந்தை மூலம் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்று ஜெயந்தியின் பெற்றோர் நினைத்து வந்தனர்.

இதற்கிடையே வக்கீல் சரவணனிடம் விவாகரத்து வழக்கு சம்பந்தமாக அரக்கோணம் வலசவாக்கத்தை சேர்ந்த ஆஷா வந்தார். அவருக்கு 5 வயதில் குழந்தை உள்ளது.

வழக்கு சம்பந்தமாக அடிக்கடி வந்தபோது சரவணன்-ஆஷா இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து சரவணன் வீட்டிலேயே குழந்தையுடன் ஆஷா தங்கினார். தற்போது ஆஷா 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை குழந்தை கோசிகாவை சரவணன் வீட்டில் விட்டுச் சென்றார். நேற்று மாலை திடீரென குழந்தை கோசிகா தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து இறந்துவிட்டதாக ஆஷா போன் மூலம் சரவணனுக்கு தகவல் தெரிவித்தார். இதுபற்றி மூன்றாம்கட்டளையில் இருந்த ஜெயந்திக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து ஜெயந்தி மகள் சாவில் மர்மம் இருப்பதாக குன்றத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை செய்த போது குழந்தை கோசிகாவை, கள்ளக்காதலி ஆஷா தண்ணீர் வாளியில் அமுக்கி கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இதைத் தொடர்ந்து ஆஷாவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வாங்குவதற்காக சரவணனிடம் வந்தேன். அவருடைய பேச்சு எனக்கு பிடித்ததால் அவருடன் நெருங்கி பழகினேன். அவர் என்னை திருமணம் செய்வதாக கூறி வீட்டில் தங்குமாறு தெரிவித்தார்.

இதனால் நான் எனது 5 வயது குழந்தையுடன் அவரது வீட்டில் தங்கி இருந்தேன். சரவணன் வீட்டில் இருந்த நகைகளை எனக்கு அணிந்து அழகு பார்ப்பார். இதனால் அவரது சொத்துக்கள் அனைத்துக்கும் எனது வயிற்றில் வளரும் குழந்தையே வாரிசு என்று நினைத்து இருந்தேன்.

ஆனால் மனைவியுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த சரவணனிடம் அவரது குழந்தை அடிக்கடி வந்தது. இதனால் மீண்டும் அவர்கள் சேர்ந்து விடுவார்கள் என்று பயந்தேன்.

எனவே குழந்தையை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். நேற்று சரவணின் தாயின் நினைவுநாள் ஆகும். இதற்காக சரவணனின் தந்தை மோகன், குழந்தை கோசிகா ஆகியோர் வீட்டுக்கு வந்திருந்தனர். பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மோகன் வெளியில் சென்றுவிட்டார்.

வீட்டில் சரவணனும் இல்லை. இதையடுத்து குழந்தை கோசிகாவை அருகில் இருந்த தண்ணீர் வாளியில் அமுக்கி கொலை செய்தேன்.

பின்னர் தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை இறந்து விட்டதாக நாடகமாடி சரவணனிடமும், அவரது தந்தை மோகனிடமும் கூறினேன். இதனை அவர்கள் நம்பி விட்டார்கள்.

ஆனால் குழந்தையின் கழுத்தில் இருந்த சிறு காயங்களை பார்த்து ஜெயந்தி போலீசில் புகார் செய்து விட்டார். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக வக்கீல் சரவணனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!