கணவனின் கள்ளத் தொடர்பு – ஓடும் ரயிலிலிருந்து இளம் பெண் செய்த விபரீத செயல்..!


சென்னையில் கணவர் வேறு பெண்ணிடம் கூடா நட்பை ஏற்படுத்திக் கொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மனமுடைந்த இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவருக்கு ஜீவிதா என்ற மகளும், முரளி என்ற மகனும் உள்ளனர். வானகரம் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

ஜீவிதாவுக்கும் ஆவடியைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் ஐ.டி.யில் பணிபுரியும் ரோஸ் என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது .

இந்நிலையில் கணவர் ரோஸ் வேறு பெண்ணிடம் திடீர் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஜீவிதாவிற்கு இந்த விவரம் தெரியவர இது பற்றி கணவரிடம் கேட்டுள்ளார்.

இது தவிர கணவர் ரோஸூம் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். வரதட்சணைக் கொடுமை குறித்தும் கணவருக்கு வேறு பெண்ணிடம் கூடா நட்பு இருப்பது குறித்தும் ஜீவிதா தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இரு குடும்பத்தாரும் சேர்ந்து சமரசம் செய்து வைத்தனர். ஆனாலும் கணவர் ரோஸ் தனது தொடர்பை விடவில்லை. ஒரு வயதுக் குழந்தை இருப்பதால் கணவன் செய்யும் கொடுமைகளை தாங்கிக் கொண்டிருந்த ஜுவிதாவை சமீபத்தில் அவரது கணவர் கடுமையாகப் பேசி தனது கூடா நட்பை விடவேண்டுமானால் லட்சக்கணக்கில் வரதட்சணை வாங்கி வரவேண்டும் என்று கூறி கடுமையாகப் பேசியுள்ளார்.


இதனால் மனம் உடைந்த ஜீவிதா கடந்த சனிக்கிழமை தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்ல மின்சார ரயிலில் ஏறியுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது தம்பிக்கு போன் செய்து கூறியுள்ளார். அவர் நீ முதலில் வீட்டுக்கு போ என்று சொன்னபோது ஜீவிதா பதில் அளிக்கவே இல்லை.

பின்னர் ரயில் கிண்டியிலிருந்து சைதாப்பேட்டை தாண்டும்போது அடையாறு ஆற்றுப்பாலத்தின் மீது வந்துள்ளது. அப்போது திடீரென ரயிலில் இருந்து ஜீவிதா அடையாறு ஆற்றில் குதித்துள்ளார். இதைப் பார்த்த சக பயணிகள் அலறியுள்ளனர்.

சிலர் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். ஆனால் அதற்குள் ஜீவிதா ஆற்றில் மூழ்கிவிட்டார். உடனடியாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் இறங்கி ஜீவிதாவை மீட்டனர். ஆனால் அவரது உயிரற்ற உடலைத்தான் மீட்க முடிந்தது.

ஜீவிதாவின் தற்கொலையை சாதாரணமான தற்கொலை வழக்காக ரயில்வே பொலிஸார் பதிவு செய்துள்ளனர். மகளை இழந்த பெற்றோர்களும், நண்பர்களும் ஜுவிதாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜீவிதாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ரோஸ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜீவிதாவின் தாயார் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து ஜீவிதாவின் தாயார் அடுத்த கட்டமாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஜீவிதாவின் ஒரு வயதுக் குழந்தையையும் மீட்டுத் தர வேண்டும் என்று புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.-Source: tamil.thehindu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!