ரித்தேஷை கொலை செய்தது எப்படி..? கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்..!


ரித்தேஷை கொலை செய்தது எப்படி? என்று வாலிபர் நாகராஜ் போலீசார் முன்னிலையில் நடித்து காட்டினார். பின்னர் ரித்தேஷின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாகராஜை போலீசார் அசோக்நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கொன்றது ஏன்? என்று நாகராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

வாக்குமூலம் விவரம்

நாகராஜ் கொடுத்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நானும், மஞ்சுளாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம். எவ்வித இடையூறும் இல்லாமல் எங்கள் நெருக்கம் நீடித்தது. கார்த்திகேயனும் நாங்கள் நெருங்கி பழகுவதை சந்தேகப்படவில்லை. நாங்கள் ஒன்றாக இருப்பதை சிறுவன் ரித்தேஷ் ஒருநாள் பார்த்துவிட்டான். அவன்தான் எங்கள் நெருக்கத்தை கார்த்திகேயனிடம் கூறிவிட்டான்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகுதான் எங்கள் உறவு வெளிச்சத்திற்கு வந்தது. அதன்பிறகு கார்த்திகேயன் எனக்கு பல வகையில் தொல்லை கொடுத்தார். என்னை போலீசார் மூலம் சிறைக்கு அனுப்பி வைத்தார். அதோடு விடவில்லை. செல்போனில் பேசி அடிக்கடி கேவலமாக திட்டினார்.

முகநூலில் படங்கள்

இந்த பிரச்சினை வெளியே வர காரணம் ரித்தேஷ்தான். இதனால் அவன் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. மஞ்சுளா எனக்கு செலவுக்கு நிறைய பணம் கொடுப்பார். அதுவும் நின்றுபோனது.

மஞ்சுளாவின் உறவும் அறுந்துபோனதால் என்னால் அதை தாங்கமுடியவில்லை. மஞ்சுளாவும், நானும் சேர்ந்து இருக்கும் படங்களை நான் செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தேன். அந்த படங்களை முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்டு கார்த்திகேயனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தேன்.

இதனால் இந்த பிரச்சினை மேலும் பெரிதானது. ரித்தேஷை கடத்திச் சென்று மிரட்டினால் மஞ்சுளா என் வழிக்கு வந்துவிடுவார் என்று கருதினேன். கார்த்திகேயனை உதறிவிட்டு, மஞ்சுளா என்னோடு வந்துவிட்டால் அவர் பெயரில் உள்ள கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் எனக்கு கிடைக்கும் என்று எண்ணினேன்.

ரித்தேஷ் என்னிடம் நன்றாகவே பேசியும், பழகி வந்தான். இதை சாதகமாக வைத்து ரித்தேஷை அவன் டியூஷன் படித்த வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றேன்.


பிரியாணி வாங்கி கொடுத்து…

அவன் மட்டன் பிரியாணி விரும்பி சாப்பிடுவான். சந்தேகப்படாமல் இருக்க எம்.ஜி.ஆர்.நகர் ஓட்டல் ஒன்றில் மட்டன் பிரியாணி வாங்கி கொடுத்தேன். பின்னர் அவனை தாம்பரம் விமானப்படை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

அங்கிருந்து மஞ்சுளாவிடம் செல்போனில் பேசி மிரட்டினேன். என்னோடு வந்துவிட வேண்டும் என்றும், அவ்வாறு வராவிட்டால் ரித்தேஷை கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினேன். அதுபோல் எதுவும் செய்ய வேண்டாம் என்று மஞ்சுளா என்னிடம் மன்றாடி கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் ரித்தேஷை கடத்திவந்த விவகாரம் தெரிந்து கார்த்திகேயன் போலீசுக்கு போய்விட்டது தெரிய வந்தது. போதை மயக்கத்தில் இருந்த நான் ரித்தேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

கழுத்தை அறுத்தேன்

நான் கொலை செய்யப்போவதை அறியாத ரித்தேஷ் என்னிடம் அம்மாவிடம் கொண்டு போய் விடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தான். உன்னை கொண்டுபோய் விட்டுவிடுகிறேன் என்று கூறினேன். அவனும் பேசாமல் உட்கார்ந்து இருந்தான்.

ரித்தேஷை எப்படி கொலை செய்யலாம்? என்று யோசித்தேன். காலியாக இருந்த பீர் பாட்டிலை உடைத்து ரித்தேஷை கீழே தள்ளி, அவனது கழுத்தை அறுத்தேன். கழுத்து அறுபடவில்லை. மாமா… மாமா, ‘என்னை விட்டுவிடுங்கள்’ என்று அவன் கெஞ்சினான். இருந்தாலும் நான் விடவில்லை. அருகில் கிடந்த இரும்பு கம்பியால் அவனது தலையில் ஓங்கி அடித்து தீர்த்து கட்டிவிட்டேன்.


தற்கொலை முயற்சி

சிறிது நேரத்தில் இறந்து கிடந்த ரித்தேஷை பார்த்து என் மனம் கலங்கியது. நாமும் இனி உயிர் வாழக்கூடாது என்று கழிவறையை சுத்தம் செய்யும் அமிலத்தை எடுத்து குடித்தேன். ஆனால் வாந்தி வந்துவிட்டது. என்னால் அதை குடிக்க முடியவில்லை.

சிறிதுநேரம் வீட்டிலேயே என்ன செய்வது? என்று தெரியாமல் உட்கார்ந்தேன். அதன்பின்பு மஞ்சுளாவை என்னிடம் செல்போனில் பேச வைத்து என்னை ராமாவரம் பகுதிக்கு வரவழைத்த போலீசார் என்னை பிடித்துவிட்டனர்.

இவ்வாறு நாகராஜ் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

வீடியோ பதிவு

நேற்று இரவு வரை போலீசார் விசாரித்தனர். நாகராஜ் கொடுத்த வாக்குமூலத்தை வீடியோவில் போலீசார் பதிவு செய்தனர். கொலை சம்பவத்தை நாகராஜ் நடித்துக் காட்டியதும் வீடியோ காட்சியாக பதிவு செய்யப்பட்டது. ரித்தேஷின் பெற்றோர் கார்த்திகேயன், மஞ்சுளா ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!