சொந்த வாழ்க்கையில் கடைசி வரை நிம்மதி இல்லாமல் வாழ்ந்து மறைந்த ஸ்ரீதேவி.!


நடிகை ஸ்ரீதேவி சினிமாவில் நடிக்கத் தொடங்கியது முதல் மரணமடையும் வரை நிம்மதியில்லாமல்தான் வாழ்ந்து வந்தார் என பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீதேவியின் அழகில் மயங்கி அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற லட்சியத்தில்தான் நான் சினிமா இயக்குனரானேன். அவருடன் 2 படங்களில் பணியாற்றியுள்ளேன். அவருடைய சொந்த வாழ்க்கை எனக்கு தெரியும். அவரை தேவதை என்றும் 20 வருடங்கள் சூப்பர் ஸ்டராக இருந்தார் எனவும் கூறுகிறார்கள். ஆனால், அவரின் சொந்த வாழ்க்கையில் இருந்த சோகங்கள் பலருக்கும் தெரியாது.


அவரது தந்தை இருக்கும் வரை அவர் மகிழ்ச்சியாக இருந்தார். அந்த காலத்தில் நடிகர், நடிகைகளுக்கு சம்பளத்தை கருப்புப் பணமாகத்தான் கொடுப்பார்கள். அதை அவரின் தந்தை வருமான வரித்துறையினருக்கு பயந்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுத்து வைத்திருந்தார். ஆனால், அதை அவர்கள் ஏமாற்றிவிட்டனர்.

அதன் பின் தாயின் அரவணைப்பில் இருந்த ஸ்ரீதேவி, தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் பத்திரப்படுத்த நிலம், வீடு என அசையா சொத்துகளில் முதலீடு செய்தார். ஆனால், அந்த சொத்துக்கள் அனைத்தும் வில்லங்கமானவை என்பது பிறகுதான் தெரிய வந்தது. அவை மொத்தமாக பறிபோய்விட்டது. போனி கபூரை சந்தித்த போது அவர் கையில் எதுவுமே இல்லை. போனி கபூரே கடனில்தான் இருந்தார். ஸ்ரீதேவியின் தாய்க்கு வெளிநாட்டில் அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக மனநிலை பாதித்தது.

அப்போது, சொத்துக்களை கேட்டு ஸ்ரீதேவியின் சகோதரி வழக்கு தொடர்ந்தார். இதனால், வாழ்க்கையில் தனித்துவிடப்பட்ட பெண்ணாகவே அவர் வாழ்ந்தார். போனிகபூரின் முதல் மனைவியின் தாய், தன்னுடைய பெண்ணின் வாழ்க்கை ஸ்ரீதேவியால் கெட்டு விட்டதாக கூறி, ஹோட்டலில் ஸ்ரீதேவியின் வயிற்றில் குத்திய சம்பவமும் நடந்தது.

இப்படி சொந்த வாழ்க்கையில் கடைசி வரை நிம்மதி இல்லாமல்தான் அவர் இருந்தார். படப்பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் அவர் சோகத்தில்தான் மூழ்கி இருந்தார்” என ராம்கோபல் வர்மா பதிவு செய்துள்ளார்.

ஒருபுறம், தனது மகள் ஜான்வியின் ஆண் நண்பர்களுடனான தொடர்பும் ஸ்ரீதேவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது எனவும், அதனால், அவர் தொடர்ந்து மது அருந்தி வந்தார் எனவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!