பிரிட்டன் தம்பதியை கடத்திய இந்திய பெண் கைது – ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு…!


தென்ஆப்பிரிக்காவில் பிரிட்டன் தம்பதியை கடத்திய இந்திய பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் சபிதீன் அஸ்லாம் டெல்வெக்சியோ. இவரது மனைவி பாத்திமா படேல். இவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையே பிரிட்டனைச் சேர்ந்த கணவன்- மனைவி இருவரும் தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா வந்திருந்தனர். ஹாவ்க்ஸ் பகுதியில் தங்கியிருந்த அவர்களை கடந்த 9-ந்தேதி முதல் காணவில்லை.

பிரிட்டன் தம்பதி பயணம் செய்த கார் ஹாவ்க்ஸ் பகுதியில் இருந்து 300 கி.மீ. தொலைவில் கேட்பாரற்ற நிலையில் நின்றது. காரை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் தீவிர விசாரணை நடத்தியபோது இந்திய தம்பதி பாத்திமா படேல் மற்றும் டெல்வெக்சியோ ஆகியோர் கடத்தி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும், அவர்களுக்கு ‘சிம்.’ கார்டுகள் வழங்கியதும் தெரியவந்தது.

இத்தகைய சம்பவங்களால் தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம் என தனது நாட்டினரை பிரிட்டன் எச்சரித்துள்ளது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!