நாளை தமிழக மக்களுக்கு முக்கிய முடிவை அறிவிக்க உள்ளேன்- டி.ராஜேந்தர் அதிரடி..!


லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 42 வருடங்களுக்கும் மேலாக அரசியல் செய்து வருகிறேன். தி.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறேன். நான் இதுவரை முதல்வர் பதவிக்கோ, அமைச்சர் பதவிக்கோ? ஆசைப்பட்டதில்லை. நான் தொடங்கிய லட்சிய தி.மு.க. 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது.

தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக முக்கிய முடிவு எடுக்கப்போகிறேன் என்று தெரிவித்திருந்தேன். இதையடுத்து நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்ன முடிவு என்று மக்கள் என்னை பார்த்து ஆர்வமுடன் கேட்கிறார்கள். நேற்று கரூர் உள்ளிட்ட இடங்களில் சுற்றுப் பயணம் செய்தபோது இது பற்றி மக்கள் என்னிடம் கேட்டனர்.


இதன் மூலம் மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்தால் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய முடிவு பற்றி நாளை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவிக்க உள்ளேன். மாற்றம் கொண்டு வருகிறோமோ இல்லையோ எனது முடிவில் மாற்றம் இருக்காது. தமிழக மக்களின் சக்தியை திசை திருப்பக்கூடிய யுக்தி என்னிடம் உள்ளது.

என்னையும், எனது மகனையும் வாழவைத்த தமிழக மக்களுக்கு என்றும் விசுவாசமாக இருப்போம். கடவுள் முருகன் மாதிரி பேசக்கூடிய அறிவு படைத்தவர் நடிகர் சிம்பு. இன்று 3 நாட்களில் கட்சி ஆரம்பிக்கிறவர்கள் முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். போராடினால்தான் அரசியலில் வெற்றி பெற முடியும்.

நானும் ஒரு ஆன்மீகவாதி தான். ஆனால் யாருக்கு ஜாதகம் நன்றாக இருக்கிறதோ? அவர்கள் ஜெயிப்பார்கள். திருச்சி ஒரு முக்கியமான இடம். இங்கு எடுக்கும் முடிவுகள் அரசியலில் எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!