வெடிகுண்டு வீசி வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பலால் ரியஸ் எஸ்டேட் அதிபர் படுகொலை…!


பாளையில் இன்று காலை வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி ரியஸ் எஸ்டேட் அதிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவர் கொடியன்குளம் குமார். இவர் மீது கொலை, மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் இருந்தன.

பிரபல ரவுடியான இவர் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடன் சேர்ந்து இவரது மகளை திருமணம் செய்த மருமகன் பாளை அண்ணா நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது38) என்பவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

சமீபத்தில் செந்தில்குமார் பாளை கே.டி.சி. நகரில் ஒரு இடம் வாங்கியுள்ளார். அந்த இடத்தை மற்றொரு தரப்பினர் தங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து மருமகன் செந்தில்குமாருக்கு பாதுகாப்பாக கொடியன் குளம் குமாரும் பாளை அண்ணாநகரில் அவருடன் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் பாளை அண்ணா நகரில் உள்ள அவர்களது வீட்டுக்கு ஒரு மர்ம கும்பல் வந்தது.

அவர்கள் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு நாட்டு வெடிகுண்டில் மிளகாய் பொடி தூளையும் சேர்த்து வைத்து கட்டி வீட்டுக்குள் எரிந்தனர். இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து மிளகாய் பொடி சிதறியது.

இதில் வீட்டுக்குள் இருந்தவர்கள் கண் எரிச்சல் ஏற்பட்டு என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், அந்த மர்மக்கும்பல் வீட்டுக்குள் அரிவாள், கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தது.


அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கொடியன்குளம் குமாரையும், அவரது மருமகன் செந்தில் குமாரையும் சரமாரி அரிவாளால் வெட்டினர். அப்போது கொடியன் குளம் குமார் பின்வாசல் வழியாக படுகாயத்துடன் தப்பி ஓடினார்.

ஆனால் அந்த மர்மக்கும்பல் செந்தில் குமாரை சுற்றி வளைத்து மார்பு, வயிறு உள்பட பல இடங்களில் கத்தி மற்றும் வாளால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டது.

வீட்டில் இருந்த செந்தில்குமார் மனைவியும், உறவினர்களும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய செந்தில்குமாரையும், கொடியன்குளம் குமாரையும் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்திலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். கொடியன்குளம் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு மாநகர துணை போலீஸ் கமி‌ஷனர் சுகுணாசிங், உதவி கமி‌ஷனர் விஜயகுமார், பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கொடியன்குளம் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலைக்கான காரணம் குறித்து திடுக் தகவல் கிடைத்துள்ளது.

நிலத்தகராறில் கொடியன் குளம் குமாருக்கு எதிரானவர் கள் கூலிப்படையை ஏவி இந்த படுகொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் அவர்களை தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!